நீதி வழங்குவதில் உள்ள தாமதம் மிகப்பெரிய தடை – பிரதமர் மோடி வேதனை!

ஏழை மக்கள் புரிந்து கொள்ளும் வகையில் சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்து உள்ளார்.

குஜராத் மாநிலத்தில் நடக்கும் சட்டத் துறை அமைச்சர்கள் மற்றும் செயலாளர்கள் மாநாட்டில், வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக, பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

மிகவும் பழமையான சட்டங்கள் நீக்கப்பட வேண்டும். சர்ச்சைகளுக்கு தீர்வு காணும் நடைமுறைகளுக்கு மாற்று வழிகள் கண்டறியப்படுவதுடன், நீதி கிடைப்பதை எளிதாக்க வேண்டும். பிற்போக்கான காலனித்துவ சட்டங்களை அகற்றுவதன் மூலம் காலனித்துவத்தின் தடைகளை உடைப்பது நமக்கு முக்கியம். அதன் மூலம் இந்தியா உண்மையான அர்த்தத்தில் முன்னேற முடியும். காலாவதியான சமூக சட்டங்கள், முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் என்பதை அறிந்ததால், அதில் இருந்து நமது சமூகம் விடுபட்டுள்ளது.

நீதி வழங்குவதில் உள்ள தாமதம் மிகப்பெரிய தடையாக உள்ளது. சட்டங்கள் எளிமையாகவும், பிராந்திய மொழிகளிலும் எழுதப்பட வேண்டும். அப்போது தான் ஏழ்மை நிலையில் இருப்பவர்களும் அதனை புரிந்து கொள்ள முடியும். சட்டம் ஒழுங்கு சமூக முன்னேற்றத்துடன் ஒன்றாக ஒத்திசையும் போது, நீதி எளிதாக கிடைப்பதை உறுதி செய்யும்.

இந்திய சமூகத்தின் வளர்ச்சிக்கான பயணம் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக சுழன்று கொண்டிருக்கிறது. அனைத்து சவால்கள் வந்த போதிலும், இந்திய சமூகம் நிலையான முன்னேற்றம் கண்டுள்ளது. இந்திய சமூகத்தின் மிகப் பெரிய சிறப்பு என்னவெனில், வளர்ச்சிக்கான பாதையில் நடைபோடும் போது, உள்நாட்டு சீர்திருத்தங்களையும் தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.

இந்தியாவின் நீதித் துறையில் தொழில்நுட்பம் ஓர் அங்கமாக மாறி உள்ளது. காணொலி மூலம் விசாரணை உள்ளிட்ட சட்ட சேவையில் உள்ள டிஜிட்டல் கண்டுபிடிப்புகள் இந்தியாவில் அறிமுகம் ஆகி உள்ளது. இந்த தொழில்நுட்பத்தை 5ஜி சேவை பலப்படுத்தும்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.