மற்றவர்களின் மனதை புண்படுத்தும் மகளின் குணம், மாற்றுவது எப்படி? #PennDiary87

எங்கள் மகள் வீட்டுக்கு ஒரே பிள்ளை என்பதால் சிறு வயதிலிருந்தே மிகவும் செல்லம் கொடுத்து வளர்த்தோம்.நாங்கள் அப்பர் மிடில் க்ளாஸ் குடும்பம். பெரு நகரம் ஒன்றில் வசிக்கிறோம். எனவே, அவள் விருப்பங்கள் எல்லாம் உடனுக்குடன் நிறைவேற்றப்பட்டன. அவரை நாங்கள் கடிந்து ஒரு வார்த்தை கூறியதில்லை என்பதுடன், பள்ளி, ட்யூஷன், உறவுகள் என்று அவளை யாராவது கண்டித்தாலும், என் மகளுக்குத்தான் சப்போர்ட் செய்து பேசுவோம். இதனால், அவளுக்கு ஏமாற்றம், கண்டிப்பு, எல்லைகள் என்பவை எல்லாம் என்னவென்றே தெரியாமல் வளர்ந்தாள்.

Girl Child

என் மகள் வளர வளர, ‘நான் இப்படித்தான்’ என்று தனக்கு ஒரு வரையறையை அவளே உருவாக்கிக்கொண்டாள். தன்னை ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு என்று அனைவரிடமும் சொல்லிக்கொள்வாள். அப்படி ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டாக இருப்பதாலேயே எல்லோரையும் எடுத்து எறிந்து பேசலாம் என்ற எண்ணத்தை தனக்குள் ஆழமாக ஊன்றிக்கொண்டாள். மற்றவர்களின் முகம் அறிந்து, மனம் அறிந்து பேசுவதெல்லாம் என்னவென்றே அவளுக்குத் தெரியவில்லை. மேலும், யாருடனும் ஒற்றுமையாக இல்லாமல் இருப்பதை, ஒருவர் கருத்துடனும் தான் ஒத்துப்போகாமல் இருப்பதை தன் தனித்தன்மை என்று அவள் நம்பத் தொடங்கினாள்.

குழந்தையாக இருந்தபோதே, நாங்கள்தான் அவளுக்கு செல்லம் கொடுத்து வளர்த்தோம் ஒப்புக்கொள்கிறோம். ஆனால், அவள் விவரம் தெரிந்து பதின் பருவத்துக்கு வந்ததில் இருந்தே, அவள் குணத்தில் உள்ள குறைபாடுகளை நானும் கணவரும் உணரத் தொடங்கிவிட்டோம். ஆனால், அதை எங்களால் அந்தக் கட்டத்தில் சரிசெய்ய முடியவில்லை.

Girl (Representational Image)

பள்ளியில் படிக்கும்போதே, அவள் குணத்தாலேயே அவளுக்கு நெருங்கிய நண்பர்கள், தோழிகள் என்று யாரும் இல்லை. அதைப் பற்றி அவள் கவலைப்படவும் இல்லை. ஆனால், கல்லூரியிலும் அதுவே தொடர ஆரம்பித்தபோது, ‘இப்போவாச்சும் நீ உன்னை மாத்திக்கோ…’ என்று நானும் என் கணவரும் அவளிடம் பக்குவமாக சொல்ல ஆரம்பித்தோம். ஆனால், அவளோ அதற்கு எதிர் திசையில் தன்னை நகர்த்தினாள். கல்லூரிப் படிப்பை முடித்து இப்போது ஓர் அலுவலகத்தில் பணியில் சேர்ந்திருக்கும் அவளுக்கு, தன் குணத்தால் பிரச்னைகள் அதிகமாகிக்கொண்டே வருகின்றன.

தன்னை சுற்றியுள்ளவர்களைவிட தான் அதிக விஷயங்கள் அறிந்தவள், தனித்தன்மை மிக்கவள், ஒருவரின் குறையை அனுசரித்துச் செல்லும் சகிப்புத்தன்மை தனக்குத் தேவையில்லை, எனவேதான் தன்னுடன் யாரும் நீண்டகால நட்பில், பேச்சுவார்த்தையில் இருப்பதில்லை.. அதைப் பற்றி தனக்குக் கவலையில்லை – இப்படித்தான் இருக்கிறாள் என் மகள் இப்போது. ஆனால், உண்மை அது இல்லை. அவளிடமும் உள்ள குணக் குறைகளை உணர அவள் தயாராக இல்லை.

இந்நிலையில், பலதரப்பட்ட மனிதர்களுடன் சேர்ந்து பணிபுரிவதும், குழு பங்கேற்புகளும் தேவைப்படும் அவளது அலுவல் சூழலில், அவள் குணம் அவளுடன் இணைந்து பணிபுரிய யாரையும் யோசிக்க வைக்கிறது. அவளும் தன்னை மற்றவர்களிடம் இருந்து விலக்கிக்கொள்கிறாள். அதனால் பணிச்சூழலில் ஏற்படும் பிரச்னைகள், அவளுக்கு மன அழுத்தம் தர ஆரம்பித்துள்ளது.

Woman (Representational Image)

தனிமை விரும்பியாக இருப்பது வேறு. அது நம் குணம் சார்ந்தது, நம் உலகம் சார்ந்தது. ஆனால், மற்றவர்களை எப்போதும் புண்படுத்தும்படி பேசி, ’நான் ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு’ என்று சொல்லிக்கொண்டு, தன்னை அனைவரிடமிருந்து தனித்தவராகக் காட்டிக்கொள்ள நினைப்பதை என்னவென்று சொல்வது? மேலும், ஸ்ட்ரெயிட் ஃபார்வேர்டு என்பது வேறு, ரூடு (Rude) ஆக இருப்பது வேறு இல்லையா? ஒருவரின் குறையை சுற்றி வளைக்காமல் அவரிடமே சொல்வதை, அமைதியான முறையிலும் சொல்ல இயலும் இல்லையா?

எப்படி புரியவைப்பது என் மகளுக்கு?

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.