விருதுநகர் மாவட்டத்தில் கிராம ஊராட்சிகளில் ஒப்பந்த வேலைகளுக்கு பணி ஆணை வழங்குவதற்கு லஞ்சம் பெறப்படுவதாக மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகளுக்கு தொடர் புகார் வரப்பெற்றுள்ளது. இந்த புகாரின் அடிப்படையில், விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட ஊரக வளர்ச்சிப்பணிகள் முகமை அலுவலக கட்டடத்தில் லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ராமச்சந்திரன் தலைமையில் ஆய்வாளர் பூமிநாதன் மற்றும் குழுவினர் நேற்று மாலை திடீர் சோதனை நடத்தினர்.

இதில், ஊராட்சிப்பணிகள் உதவி இயக்குநர் உமாசங்கர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத 6 லட்சத்து 68 ஆயிரம் ரூபாய் பணத்தை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து இந்தச்சோதனை இரவு வரை நீடித்தது. லஞ்ச ஒழிப்பு துறையினரின் இந்த சோதனை தொடர்பாக அதிகாரிகளிடம் கேட்டபோது, உதவி இயக்குநர் அலுவலகத்திலிருந்து கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டது தொடர்பாக வழக்கு பதிவு செய்து துறைரீதியான நடவடிக்கைக்கு பரிந்துரைக்கப்படும் என்றனர்.

விருதுநகரில் ஊராட்சிகள் உதவி இயக்குநர் அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் பணம் பறிமுதல் செய்த சம்பவம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.