அதிகாலை காட்சிகள் – பயப்பட ஆரம்பிக்கும் ஹீரோக்கள்?

தமிழ் சினிமாவில் புதிய படம் வெளியாகும் நாளில் அதிகாலை காட்சிகள் என்பது கடந்த ஐந்து வருடங்களாகத்தான் அதிகமாக நடந்து வருகிறது. அதற்கு முன்பெல்லாம் வெளியூர்களில் காலை காட்சி என்பது பொதுவாக 10 மணிக்கும், சென்னை போன்ற பெரு மாநகரங்களில் 11 மணிக்கு மேலும் ஆரம்பமாகும்.

அதிகாலை காட்சிகள் என்பது விடியற்காலை 4 மணிக்கு கடந்த சில வருடங்களாக நடைபெற்று வந்தது. சில படங்களுக்கு 5 மணிக்கும் நடைபெறுகிறது. ஆனால், சமீபத்தில் வெளிவந்த விஜய் தேவரகொண்டா நடித்த டப்பிங் படமான 'லைகர்' படத்தின் மாபெரும் தோல்வி இங்குள்ள பல ஹீரோக்களையும் யோசிக்க வைத்துவிட்டது. இப்படத்தின் அதிகாலை காட்சியில் படம் பார்த்துவிட்டு வந்த ரசிகர்களின் கருத்துக்களை யுடியூப் சேனல்கள் எடுத்து வெளியிட்டு அது பரபரப்பை ஏற்படுத்தி படத்திற்கு நெகட்டிவ்வாக அமைந்து அடுத்த சிறப்பு காலை காட்சியான 8 மணிக்கே ரசிகர்களை வரவிடாமல் செய்துவிட்டது.

கவுதம் மேனன் இயக்கத்தில், சிம்பு நடித்து வெளிவந்த 'வெந்து தணிந்தது காடு' பட வெளியீட்டிற்கு முன்பாக அதிகாலை காட்சிக்கு வருபவர்கள் முன் தினம் இரவு நன்றாகத் தூங்கிவிட்டு வரவேண்டும் என்று கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்ததும் பல மீம்ஸ்கள் வந்து படத்தையும் சேர்த்து கிண்டலடித்தது.

இதனால், தற்போது அதிகாலை சிறப்பு காட்சி என்றாலே ரசிகர்கள் பயப்படுகிறார்கள். மல்டி ஸ்டார்கள் நடித்து வெளிவந்த 'பொன்னியின் செல்வன்' படம் மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.

அடுத்து தீபாவளியை முன்னிட்டு அடுத்த வாரம் அக்டோபர் 21ம் தேதி வெளியாக உள்ள கார்த்தி நடித்த 'சர்தார்' படத்திற்கு அதிகாலை சிறப்பு காட்சி வேண்டாமென படக்குழு முடிவு செய்துவிட்டார்கள். காலை 8 மணிக்குதான் படத்தின் முதல் சிறப்பு காட்சி நடைபெற உள்ளது.

சிவகார்த்திகேயன் நடித்து வெளிவர உள்ள 'பிரின்ஸ்' படத்திற்கு அதிகாலை காட்சி 5 மணிக்கு ஆரம்பமாகிறது. முதலில் 4 மணிக்குத்தான் காட்சி வைத்திருந்தார்களாம். ஆனால், சிவகார்த்திகேயன் அவ்வளவு சீக்கிரத்தில் வேண்டாம் 5 மணிக்கு மாற்றிக் கொள்ளுங்கள் என்று சொன்னதாக ஒரு தகவல்.

இரண்டு படங்களுக்கும் முன்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் இன்னும் அதிக அளவில் முன்பதிவு ஆகவில்லை. படம் வெளியாகும் நாளில் அவரவர் தங்கள் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டிய பரபரப்பில் இருப்பார்கள். அடுத்த இரண்டு நாட்களும் விடுமுறை தினம் என்பதாலும், திங்கள் கிழமைதான் தீபாவளி என்பதாலும் படம் வெளியாகும் போதுதான் முன்பதிவு சிறப்பாக இருக்கும் எனத் தெரிகிறது.

படம் நன்றாக இருந்து ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துவிட்டால் அதிகாலை காட்சிகளால் எந்த ஆபத்தும் இல்லை. மாறாக, படம் சுமாராகவோ, மிகச் சுமாராகவோ இருந்தால் சமூக வலைத்தளங்களிலும், யு டியூப்களிலும் வரும் ரசிகர்களின் கமெண்ட்டுகள் அந்தப் படங்களுக்கு ஆபத்தை ஏற்படுத்திவிடுகின்றன. தயாரிப்பாளர்கள் சங்கம் தியேட்டர்களில் ரசிகர்களின் கருத்துக்களை எடுக்க வேண்டாம் என்று சொன்னாலும் பல தியேட்டர்காரர்கள் அதை செயல்படுத்துவதில்லை என திரையுலகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது.

'பிரின்ஸ், சர்தார்' படங்களின் அதிகாலை காட்சிகளின் ரிசல்ட், அடுத்தடுத்து வர உள்ள இரண்டாம் கட்ட ஹீரோக்களின் படங்களுக்கான அதிகாலை காட்சிகள் பற்றிய ஒரு முடிவை எடுக்கக் காரணமாக அமையலாம். அதே சமயம் பொங்கலுக்கு வெளிவர உள்ள 'வாரிசு, துணிவு' படங்களுக்கு நள்ளிரவில் காட்சிகளை வைத்தால் கூட அவர்களது ரசிகர்கள் வருவார்கள் என்பதும் உண்மை. 2023ல் வேண்டுமானால் அதிகாலை காட்சிகளுக்கு ஒரு மாற்றம் வரலாம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.