காங்கிரஸ் தலைவர் தேர்தல்: வாக்குச்சீட்டு எப்படி இருக்கும்? எவ்வாறு வாக்களிப்பது?

நாட்டின் மூத்த அரசியல் கட்சியாக திகழும் அகில இந்திய
காங்கிரஸ்
கட்சி, கடந்த மூன்று ஆண்டுகளாக சரியான தலைமையின்றி தவித்து வந்தது. இந்த சூழலில் புதிய தலைவரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டு, அதற்கான தேதியும் இறுதியானது. முக்கியத் தலைவர்கள் பலரின் பெயர்கள் அடிபட கடைசியில் மல்லிகார்ஜுன கார்கே, சசிதரூர் என இரண்டே பேருடன் வாக்குச்சீட்டு சுருங்கிப் போனது.

நாளைய தினம் (அக்டோபர் 17) காலை 10 மணிக்கு தொடங்கி மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதற்காக டெல்லி மற்றும் அனைத்து மாநில காங்கிரஸ் கட்சி தலைமை அலுவலகங்களில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி, பொதுச் செயலாளர்கள், மாநில பொறுப்பாளர்கள், செயலாளர்கள், இணைச் செயலாளர்கள் உள்ளிட்டோர் வாக்களிக்க உள்ளனர்.

காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் ஆணையம் (CEA) அளித்த தகவலின்படி, மொத்தம் 36 வாக்குச்சாவடிகளும், 67 பூத்களும் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு 200 வாக்காளர்களுக்கும் ஒரு பூத் என்ற கணக்கின் படி ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்திய ஒற்றுமை பயணத்தில் ஈடுபட்டுள்ள ராகுல் காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்கள் வாக்களிக்கும் வகையில் சிறப்பு வாக்குச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் 9 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வாக்களிக்க உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக முதல்முறை சிறப்பு QR கோட் பொருத்தப்பட்ட ஐடி கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. 140 ஆண்டுகால காங்கிரஸ் கட்சியின் வரலாற்றில் இத்தகைய வசதிகள் இடம்பெறுவது மிகுந்த கவனம் பெற்றுள்ளன. வாக்குச்சீட்டை பொறுத்தவரை மஞ்சள் நிற பேப்பரில் வேட்பாளர்கள் பெயர்கள் ஆங்கிலம் மற்றும் இந்தியில் எழுதப்பட்டிருக்கும்.

அதனருகே Mark என்ற கட்டம் காணப்படும். அதில் எந்த வேட்பாளருக்கு ஆதரவு தெரிவிக்கிறோமோ? அந்த கட்டத்தில் டிக் அடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அந்த கட்டத்தில் தாங்கள் விரும்பும் வேட்பாளர்களை வரிசைப்படுத்தும் வகையில் 1, 2 என எழுத வேண்டும் என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால் அவ்வாறு செய்யக்கூடாது என்று தேர்தலை நடத்தும் மதுசூதனன் மிஸ்ரி அவர்கள் விளக்கம் அளித்துள்ளார். தமிழகத்தை பொறுத்தவரை மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவிற்கே பெரும்பாலானோர் ஆதரவு தெரிவித்துள்ளனர். சசிதரூரை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. இந்நிலையில் வாக்கு எண்ணிக்கை வரும் 19ஆம் தேதி நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.