நயன்தாரா – விக்னேஷ் சிவன் விவகாரம்: 4 பேர் கொண்ட குழு விசாரணை!

நயன்தாரா விவகாரத்தில் 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருவதாகவும், விசாரணை நிறைவில் விதிமீறல் உள்ளதா என்பது தெரிய வரும் எனவும் தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து உள்ளார்.

தமிழக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

நடிகை நயன்தாரா மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் தம்பதி வாடகைத் தாய் மூலம் குழந்தை பெற்ற விவகாரம் தொடர்பாக 4 பேர் கொண்ட குழு விசாரணை நடத்தி வருகிறது. விசாரணை நிறைவில் விதிமீறல் உள்ளதா என்பது தெரிய வரும்.

புதிதாக மருத்துவ கிடங்கு இல்லாத மாவட்டங்களில் மருத்துவக் கிடங்கு கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் செயல்படும் மருத்துவக் கிடங்குகளை மூடும் எண்ணம் எங்களுக்கு கிடையாது. எடப்பாடி பழனிசாமி வாய்க்கு வந்ததை பேசுகிறார். 10 ஆண்டுகள் செய்ய முடியாத பணிகளை நாங்கள் செய்து வருகிறோம்.

தமிழகத்தில் மருத்துவப் படிப்பு கலந்தாய்வுக்கான தரவரிசை பட்டியல் நாளை காலை 9 மணிக்கு வெளியிடப்பட உள்ளது. மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான ஆன்லைன் விண்ணப்பம் செப்டம்பர் மாதம் 21 ஆம் தேதி முதல் அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி வரை நடைபெற்ற நிலையில் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் காலியாக உள்ள மருத்துவப் பணியிடங்கள் நிரப்ப முதலமைச்சரின் கவனத்திற்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

வாடகைத் தாய் விவகாரத்தில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் தம்பதி, விசாரணை நடத்தும் மருத்துவக் குழுவிடம், நேற்று ஆதாரங்களை சமர்ப்பித்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.