சென்னை எழிலகத்தில் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி இன்று (அக். 16) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,”எந்த நியாய விலை கடைகளுக்கும் நேரில் சென்று பார்க்காமல் அவரது கட்சிக்காரரான அண்ணமலை கூறியதை கேட்டு உண்மைக்கு புறம்பாக பேசியுள்ளார், ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல்.
தமிழ்நாட்டில் 712 ஆலைகள் மூலம் மக்களுக்கு தரமான அரிசி வழங்கி வருகிறோம். அத்தியாவசிய பொருளான அரிசி, அதனை தமிழ்நாடு அரசு முறையாகவும், தரமாகவும் மக்களுக்கு வழங்கி வருகிறது.
கடந்த மாதத்தில் தி.நகரில் 4 நியாய விலை கடைகளை மத்திய இணை அமைச்சர் அஸ்வினி பார்வையிட்டு தரமான பொருட்கள் வழங்கப்படுகிறது என பாராட்டி சென்றார்.
ஞாயிற்றுக்கிழமை நியாய விலை கடைகள் விடுமுறை. அப்படி இருந்தும் நேரில் பார்க்காமல் தமிழ்நாடு அரசை குற்றஞ்சாட்டுகின்ற வகையில் ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் பொதுவெளியில் கூறியது வருத்தம் அளிக்கிறது. 38 ஆயிரம் நியாய விலை கடைகள் செயல்பட்டு வருகிறது, ஆனால் எந்த ஒரு கடைக்கும் நேரில் சென்று பார்க்காமல் குறைக் கூறியுள்ளார்.
குறிப்பிட்டு குறை கூறுவதற்கு காரணமே அரசியல் செய்ய வேண்டும் என்பது மட்டுமே. விரைவில் நாடாளுமன்ற தேர்தல் வருகிறது, அதை வைத்து அரசியல் செய்யவே மத்திய அமைச்சர் அப்படி கூறியுள்ளார்.
இந்தியாவிலேயே பொது விநியோக திட்டத்தில் சிறப்பு திட்டத்தை கொண்டு வந்து, தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது” என்றார்.
மேலும், இந்திய உணவு கழகம் கண்காணித்து வரும்போது எப்படி தரமில்லாத அரிசியை வழங்க முடியும் என்றும் அமைச்சர் கேள்வி எழுப்பினார். நியாய விலை கடைகளில் கடந்த ஆண்டுகளிலும், இதற்கு முன்னர் இருந்த ஆட்சிகளிலும் பிரதமர் மோடியின் படங்கள் வைக்கப்பட்டது இல்லை என்றும் அவரின் படத்தை பயன்படுத்த வேண்டிய இடத்தில், தமிழ்நாடு அரசின் சார்பில் பயன்படுத்தப்படுகிறது
என்றும் தெரிவித்தார்.