தமிழ் சினிமாவில் எத்தனையோ கதாநாயகர்கள் இருந்தாலும் சிலருக்கு மட்டும்தான் அனைவரும் ரசிகர்களாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சில நடிகர்களில் ஒருவர் சியான் விக்ரம். 1990ஆம் ஆண்டு ’என் காதல் கண்மணி’ என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் விக்ரம். ஆனால் ஆரம்பக்கட்டத்தில் அவருக்கு சரியான வெற்றி எதுவும் கிடைக்கவில்லை. இதனால் பின்னணி குரல் கொடுப்பது, டபுள் ஹீரோ சப்ஜெக்ட் என்று கிடைத்த வாய்ப்புகள் அனைத்தையும் பயன்படுத்தி சினிமாவுக்குள்ளேயே இயங்கினார்.
ஏறத்தாழ 10 வருடங்களுக்கும் மேல் போராடிய விக்ரம் சேது படத்தின் மூலம் தனது அத்தியாயத்தை எழுதத் தொடங்கினார். அந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்று விக்ரமுக்கு உயிர் கொடுத்தது. இதனையடுத்து அவருக்கென்று தனி மார்க்கெட் உருவானது. ரசிகர்களும் கூடினர். இதனால் அடுத்தடுத்து அவர் நடித்த படங்கள் மெகா ஹிட்டடித்தன. குறிப்பாக விக்ரம் ஒரே பாதையில் பயணிக்காமல் ஒருபக்கம் காசி, பிதாமகன் என கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களில் நடிப்பது, மறுபக்கம் தில், தூள், ஜெமினி, சாமி என கமர்ஷியல் படங்களில் நடிப்பது என தனது சாம்ராஜ்ஜியத்தை வலுவாக்கிக்கொண்டார்.
நடிப்பு மட்டுமின்றி பாடல்களையும் பாடுபவர் விக்ரம். அதேபோல் ரசிகர்களிடமும், பிற கதாநாயகர்களிடமும் எந்தவித ஈகோவும் இல்லாமல் நடந்துகொள்பவர் என்ற பெயரையும் பெற்றிருக்கிறார். இவர் சமீபத்தில் நடித்த படங்கள் சரியாக போகவில்லை என்றாலும் பொன்னியின் செல்வன் மாபெரும் வெற்றிபெற்றது. அதில், ஆதித்த கரிகாலனாக விக்ரம் கலக்கியிருந்தார். பொன்னியின் செல்வனுக்கு பிறகு பா.இரஞ்சித்துடன் இணைந்துள்ளார். இதனால் இப்படத்துக்கு இப்போதே எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெரும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடத்துக்கு நன்றி. pic.twitter.com/fv2Pz56IUL
— Aditha Karikalan (@chiyaan) October 17, 2022
இந்நிலையில் விக்ரம் திரையுலகுக்கு வந்து இன்றுடன் 32 ஆண்டுகள் நிறைவடைகின்றன. இதனையொட்டி அவருக்கு பலரும் தங்களது வாழ்த்துகளை தெரிவித்துவருகின்றனர். எனவே ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும்விதமாக தனது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டு, “இத்தனை வருடங்கள். அத்தனை கனவுகள். முயற்சி திருவினை ஆக்கும் என்பார்கள். நீங்கள் இல்லையெனில் அது வெறும் முயற்சி மட்டுமே. இந்த 32 வருடங்களுக்கு நன்றி” என குறிப்பிட்டுள்ளார்.