சென்னையில் ‛துணிவு' படப்பிடிப்பு: முகமூடி அணிந்து பங்கேற்ற அஜித்

அஜித், தற்போது மீண்டும் எச்.வினோத் இயக்கத்தில் 'துணிவு' படத்தில் நடித்து வருகிறார். இருவரும் இணைந்திருக்கும் 3வது படம் இது. இப்படத்தில் கதாநாயகியாக மஞ்சு வாரியர் நடிக்க, சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். போனி கபூர் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார். நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு விசாகப்பட்டினம், சென்னை, பாங்காக்கில் நடந்தது. தற்போது பேட்ச் ஒர்க் தொடர்பான படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி உள்ளது. இதன் ஒரு பகுதியாக சென்னை அண்ணாசாலையில் படப்பிடிப்பு நடைபெற்றது. ஞாயிற்றுகிழமை விடுமுறை நாள் என்பதால் போலீசார் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்திருந்தனர்.

இதில் அஜித், மஞ்சு வாரியர் கலந்து கொண்டனர். தமிழ்நாடு தீயணைப்பு மற்றும் மீட்புப் பணித்துறை என எழுதப்பட்டிருந்த வாகனத்தின் மீது அஜித்தும், மஞ்சுவாரியரும் முகமூடி அணிந்து அமர்ந்திருந்தனர். அஜித் படத்தின் படப்பிடிப்பு நடப்பதை கேள்விப்பட்ட அக்கம் பக்கத்தினர் படப்பிடிப்பு பகுதியில் திரண்டனர். இதனால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. போலீசார் கூட்டத்தை கட்டுப்படுத்தி படப்பிடிப்புக்கு உதவினார்கள்.

வங்கி ஒன்றில் கொள்ளை நடப்பதாகவும் அதனை அதிகாரியான அஜித் எப்படி தடுக்கிறார் என்பது மாதிரியான கதை என்கிறார்கள். வங்கியின் உள்ளே நடக்கும் காட்சிகள் அரங்குகள் அமைத்து படமாக்கப்பட்டது. இதன் வெளிப்புற காட்சிகளை மட்டும் அண்ணா சாலையில் படமாக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று படப்பிடிப்பு நடந்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.