‘மாநிலத்தின் உரிமைகளில் மத்திய அரசு தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம்’ – ஜெயக்குமார்

100 மத்திய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும், ஆனால் அவர்களால் நல்லது நடந்தால் சரி, தமிழக அரசு உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம் என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவின் 51 ஆம் ஆண்டு தொடக்க விழாவை முன்னிட்டு சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுகவின் தலைமை அலுவலகத்தில் கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் அலுவலகத்தில் நிறுவப்பட்டுள்ள கொடிக்கம்பத்தில் அதிமுகவின் கொடியேற்றினார். மேலும் 51 ஆம் ஆண்டு துவக்க விழாவில் கலந்து கொண்ட தொண்டர்களுக்கு எடப்பாடி பழனிச்சாமி இனிப்புகள் வழங்கியும், அதன் பின்னர் அதிமுகவின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அக்கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்திற்குப் பிறகு, அதிமுக அலுவலகத்தின் வெளியே ஏழை எளிய பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கினார்.
இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, எம்ஜிஆர் நல்லாசியோடு, ஜெயலலிதா நல்லாசியோடு அதிமுக 50-வது பொன்விழா ஆண்டை நிறைவு செய்து, இன்று 51வது ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சிகள் மிகச் சிறப்பாக எழுச்சியாக தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தலைமை கழகத்திலும் மிகச் சிறப்பாக எழுச்சியாக அனைத்து தொண்டர்கள் நிர்வாகிகள் பொதுமக்கள் வரவேற்புடன் மிகச் சிறப்பாக துவக்க விழா ஆண்டை கொண்டாடினோம் நன்றி என தெரிவித்தார்.
image
இதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ”சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் இருக்கை ஒதுக்குவது தொடர்பாக பல முறை கடிதங்கள் கொடுக்கப்பட்டுள்ளது. கண்டிப்பாக கடிதத்திற்கு மதிப்பளித்து எங்களுக்கு மரியாதையும், உரிமையும் நிலை நாட்ட வேண்டியதுதான் சபாநாயகர் உடைய கடமை. மேலும், ஓபிஎஸ் தரப்பில் 4 பேர் மட்டும் தான். இபிஎஸ் தரப்பில் தான் அதிக அளவு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். இபிஎஸ் தரப்பு – ஓபிஎஸ் தரப்பு என்று ஊடகங்கள் போடாதீர்கள்” என்றும் கேட்டுகொண்டார்.
தொடர்ந்து பேசிய அவர், “மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி என்ற கோட்பாட்டை பின்பற்றி வருகிறோம். மாநில அரசின் உரிமைகளில் தலையிடுவதாக இருந்தால், அதை அதிமுக கண்டிப்பா எதிர்க்கும். 100 மத்திய அமைச்சர்கள் கூட தமிழகத்திற்கு வரட்டும், ஆனால் அவர்களால் நல்லது நடந்தால் சரி, உரிமைகளில் தலையிட்டால் கண்டிப்பாக எதிர்ப்போம்” எனவும் அவர் தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.