லிப்ட் கொடுப்பது போல் நடித்து பெண்ணிடம் நகை பறித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் குண்ணவாக்கம் பகுதியை சேர்ந்தவர் சரிதா(39). இவர் ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சரிதா வேலைக்கு செல்வதற்காக குண்ணவாக்கம் பேருந்து நிலையம் அருகே சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் காரை நிறுத்தி, வேலைக்கு செல்லும் இடத்தில் இறக்கி விடுவதாக கூறி காரில் அழைத்துச் சென்றுள்ளார். இதையடுத்து அவர், சரிதாவிடமிருந்த 4 கிராம் தங்க கம்மளை பறித்து சென்றுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இந்த சம்பவம் குறித்து ஒரகடம் காவல் நிலையத்தில் சரிதா புகார் கொடுத்தார். இந்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் அப்பகுதியில் இருந்த சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதில் செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி வள்ளலார் நகரை சேர்ந்த சதாம் உசேன் (29) என்பவர் நகையை திருடியது தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை செய்ததில், இதுபோல மற்றொரு பெண்ணிடமும் மோதிரம் திருடி சென்றதும் தெரிய வந்துள்ளது. இதையடுத்து சதாம் உசேனை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.