வைகை ஆற்றில் நீர் அளவீடு அளவுகோல் அமைப்பு: பொதுப் பணித் துறை நடவடிக்கை

மதுரை: வைகை ஆற்றில் சமீப காலமாக அடிக்கடி அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டு வெள்ளம் ஏற்படுவதால் நீர் வரத்தை கண்காணிக்க மதுரையில் ஆற்றில் இரண்டு இடங்களில் பொதுப் பணித்துறை நீர் அளவீட அளவுகோல் அமைத்துள்ளது.

மதுரை வைகை ஆற்றில் கடந்த 30 ஆண்டிற்கு முன்பு வரை ஆற்றின் இரு கரைகளையும் தொட்டப்படி தண்ணீர் கரைபுரண்டு ஓடும். ஆனால், கடந்த கால் நூற்றாண்டாக வைகை ஆறு நீர் வரத்து இல்லாமல் வறண்டது. அணையில் தண்ணீர் திறந்துவிட்டால் மட்டுமே வைகை ஆற்றில் தண்ணீர் வரும். மற்ற காலங்களில் கழிவு நீர் ஓடும் ஓடையாக மாறியது. தற்போது கடந்த 2 ஆண்டுகளாக பெரியாறு, வைகை நீர்பிடிப்பு பகுதிகளில் நல்ல மழை பெய்கிறது. அதனால், சமீப காலமாக அணையில் அடிக்கடி தண்ணீர் திறந்துவிடப்படுவதால் வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மேலும், தண்ணீரும் நிரந்தரமாகவும் சென்று கொண்டிருக்கிறது. அதனால், நீர் வரத்தை கண்காணிக்க தற்போது மதுரை வைகை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆரப்பாளையம் உயர் மட்டபாலம், ஏவி மேம்பாலம் ஆகிய இரண்டு இடங்களில் பொதுப்பணித்துறை ஆற்றில் நீர் அளவீடு அளவுகோல் அமைத்துள்ளது.

பொதுப் பணித்துறை அதிகாரிகள் கூறுகையில், “வைகை ஆற்றில் நிலையூர் தடுப்பனை, விரகனூர் அணை ஆகிய இடங்களில் மட்டுமே முன்பு நீர் அளவீடு அளவுகோல் இருந்தது. மதுரை நகர் பகுதியில் நீர் வரத்தை சரியாக அளவீட முடியவில்லை. தோராயமாகவே இதுவரை அளவு செய்து வந்தோம். அதனால், வெள்ளநேரத்தில் நீர் வரத்தின் அளவை துல்லியமாக கணக்கீட முடியவில்லை. அதனால், தற்போது ஆரப்பாளையம் உயர்மட்டபாலம், ஏவி மேம்பாலம் ஆகிய இடங்களில் வைகை ஆற்றில் நீர் அளவீடு அளவுகோல் அமைக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் திறந்துவிடப்படும் தண்ணீர் ஆற்றில் எவ்வளவு வருகிறது என்பதை கண்காணித்து மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை செய்யவும், கண்காணிக்கவும் இந்த அளவு கோல் உதவும்” என்று அதிகாரிகள் கூறினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.