அதானி துறைமுகத்திற்கு எதிர்ப்பு திருவனந்தபுரத்தில் மீனவர்கள் மறியல்

திருவனந்தபுரம்: திருவனந்தபுரம் அருகே விழிஞ்சம் பகுதியில் அதானி குழுமத்தினரால் கட்டப்பட்டு வரும் துறைமுகப் பணிகளால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி அப்பகுதி மீனவர்கள் கடந்த சில மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் துறைமுகப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் தங்களுக்கு ரூ.100 கோடிக்கு மேல் நஷ்டம் ஏற்பட்டுள்ளது என்றும், பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறி அதானி குழுமம் சார்பில் கேரள உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.

இதை விசாரித்த உயர்நீதிமன்றம், துறைமுகத்திற்கு மத்திய போலீஸ் பாதுகாப்பு அளிக்கவும், துறைமுகத்தின் அருகே போடப்பட்டுள்ள போராட்ட பந்தலை உடனடியாக அகற்றவும் உத்தரவிட்டது. இந்நிலையில் மீனவர்கள் நேற்று தங்களது போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்தினர். திருவனந்தபுரத்தில் திருவல்லம், உச்சக்கடை, விழிஞ்சம், ஸ்டேஷன்கடவு, பூவார் மற்றும் சாக்கை ஆகிய 6 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.   இந்தப் போராட்டம் காரணமாக திருவனந்தபுரம் நகர் முழுவதும் நேற்று மதியம் வரை பொதுமக்கள் கடுமையாக அவதிப்பட்டனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.