சசிகலாவை ரவுண்ட் கட்டிய சிக்கல்… ஜெ., மரணமும், மாறப் போகும் அரசியலும்!

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடரில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தின் அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. அதில்,

மற்றும் அவரது உறவினர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டதால் தான் இளவரசி உள்ளிட்டோரை போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா வெளியேற்றினார். 2012 ஜனவரியில் நடந்த பொதுக்குழு கூட்டத்தில் சசிகலா மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் எந்தவிதத் தொடர்பும் கொள்ள வேண்டாம் என கட்சி உறுப்பினர்களை எச்சரித்தார்.

மீண்டும் சசிகலாவின் வருகையை அவர் வழங்கிய உறுதிமொழிக் கடிதத்தின் அடிப்படையில் மட்டுமே அனுமதித்தார். கிருஷ்ண ப்ரியாவின் சாட்சியத்தின் படி, சசிகலாவிற்கும் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவிற்கு இடையில் நல்லுறவு இல்லை. ஜெயலலிதாவின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப சேவை செய்ததால் சசிகலாவை மட்டுமே போயஸ் கார்டனுக்குள் மீண்டும் நுழைய அனுமதி அளிக்கப்பட்டதாக ஆணையம் தெரிவித்துள்ளது.

ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதில் இருந்து அனைத்து மருத்துவ நிகழ்வுகளும் சசிகலாவால் ரகசியம் காக்கப்பட்டன. அப்போலோ மருத்துவமனையின் 10 அறைகளை சசிகலாவின் உறவினர்கள் ஆக்கிரமித்து கொண்டனர். ஜெயலலிதாவிற்கு ஆஞ்சியோ/ அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்தும், கடைசி மூச்சு இருக்கும் வரை எதுவும் செய்யப்படவில்லை.

ஆகவே சசிகலாவை குற்றம்சாட்டுவதை தவிர வேறு எந்தவொரு முடிவிற்கும் வர இயலவில்லை என்று ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த தகவல்களால் சசிகலாவின் அரசியல் வாழ்வு ஆட்டம் காணும் நிலை ஏற்பட்டுள்ளது. ஏனெனில் ஆணையத்தின் பரிந்துரையின் பேரில் உரிய விசாரணை நடத்த புதிதாக ஆணையம் ஒன்றை தமிழக அரசு அமைக்கலாம். இல்லையெனில் வேறு வழிகளில் விசாரிக்க திட்டமிடலாம்.

அதில் சசிகலா ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும். ஆறுமுகசாமி ஆணையம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளுக்கு வலுவான ஆதாரங்கள் இருப்பதால், அவ்வளவு எளிதில் தப்பிக்க முடியாது என்று கூறப்படுகிறது. இதனால் விசாரணையின் முடிவில் சசிகலாவின் நிலை என்னவாகும் என்ற பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அதிமுகவை மீட்டெடுத்து அதன் தலைமை பொறுப்பில் அமர சசிகலா தீவிரம் காட்டி வருகிறார். இதற்காக ஓ.பன்னீர்செல்வம் தரப்பிடமும் ரகசியமாக பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் அணிகளை ஒன்றிணைக்க முயற்சி எடுத்து வருகிறார். இதையொட்டி மாநிலம் தழுவிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்த நிலையில், சசிகலா மீது ஆணையம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளால் அவரது ஆதரவாளர்கள் மட்டுமின்றி அதிமுக தொண்டர்களும் எதிர்மறையான முடிவுகளை எடுக்க வாய்ப்புள்ளது. ஓ.பன்னீர்செல்வம் கைகோர்க்கும் விஷயம் கேள்விக்குறியாக மாறும். எடப்பாடி கை ஓங்குவதற்கு சூழல் உருவாகும். இதனால் அதிமுகவில் பிளவு என்பது மேலும் நீளும். இது அக்கட்சியின் எதிர்காலத்திற்கு மட்டுமின்றி, சசிகலாவின் அரசியல் வாழ்விற்கும் நல்லதல்ல என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.