தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற போராட்டம் இறுதியில் வன்முறையில் தான் முடிந்தது. இந்த வன்முறை மற்றும் காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் பதின்மூன்று பேர் உயிரிழந்தனர். அதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
இந்த துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணையம் விசாரணை மேற்கொண்டது. இந்த ஆணையம் மேற்கொண்ட விசாரணை அறிக்கையை அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் ஆணைய குழு இன்று நடைபெற்ற சட்டசபை கூட்டத் தொடரில் தாக்கல் செய்தது.
சட்டசபையில் எதிர்கட்சி துணைத்தலைவர் தொடர்பாக நடந்த பிரச்சனையினால், இபிஎஸ் தரப்பு அதிமுக எம்.எல்.ஏக்கள் கூச்சலில் ஈடுபட்டதால் அவர்களை சட்டசபைக் கூட்டத்தில் இருந்து வெளியேற்ற சபாநாயகர் உத்தரவிட்டார். அதன்பின்னர், அவர்கள் சட்டசபையில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.
இந்நிலையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் இல்லாமல் தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை குறித்த அறிக்கை சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டது. இந்த அறிக்கையில் துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பு போராட்டக்காரர்களை எச்சரிப்பதற்காக பயன்படுத்தும் நன்றாக கேட்கக்கூடிய மெகா போன் மூலமாக எச்சரிக்கை செய்யப்படவில்லை என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அந்த அறிக்கையில் அப்போதைய தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் மற்றும் மூன்று வருவாய்த்துறை அலுவலர்கள் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் துப்பாக்கி சூடு சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்கள், சட்டப்பூர்வ வாரிசுகளுக்கு ரூ. 50 லட்சம் இழப்பீடு தொகை வழங்க வேண்டும் என்று தெரிவித்துள்ளதாகவும் தெரிகிறது.