மேட்டூர் அணையில் தரமான சம்பவம்… கூடவே ஓர் அபாய எச்சரிக்கை!

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையானது, தமிழகத்தின் 12 மாவட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரிதும் உறுதுணையாக இருந்து வருகிறது. பருவமழை தொடங்கி விட்டால் போதும். கர்நாடகாவில் இருந்து காவிரி நீர் ஓடிவந்து மேட்டூர் அணையை நிரப்பி விடும். அப்படித் தான் கடந்த 6 நாட்களாக முழு கொள்ளளவான 120 அடியில் நீர்மட்டம் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக
கனமழை
பெய்து கொண்டிருக்கிறது. இதனால் அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதையடுத்து இரு அணைகளில் இருந்தும் உபரிநீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. மேலும் இருமாநில எல்லையில் உள்ள காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை

இதன் காரணமாக ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து கிடுகிடுவென அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. ஒகேனக்கல் காவிரியில் நேற்று முன்தினம் காலை விநாடிக்கு 1.75 லட்சம் கனஅடி நீர் வந்தது. மாலையில் 1.85 லட்சம் கனஅடியாக அதிகரித்தது. நேற்று காலையும் அதே 1.85 லட்சம் கனஅடியாக நீடித்தது. இதற்கிடையில் ஒகேனக்கலில் உள்ள மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்டவற்றில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

எனவே காவிரியில் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் விதிக்கப்பட்டுள்ள தடை தொடர்ந்து நீடிக்கிறது. சமீபத்திய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.95 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது. நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியாக நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் நீர் முழுமையாக ஆற்றில் திறந்து விடப்படுகிறது.

நீர்மின் நிலையங்கள் வழியாக 21 ஆயிரத்து 500 கன அடி நீரும், உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக ஒரு லட்சத்து 73 ஆயிரத்து 500 கன அடி நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்கு 200 கன அடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு 93.47 டி.எம்.சியாக உள்ளது.

இந்த சூழலில் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை தொடர்கிறது. மேட்டூர் அணைக்கு தொடர்ந்து நீர்வரத்து அதிகரித்து வருவதால் வலது மற்றும் இடது கரையில் நீர்வளத்துறை அதிகாரிகள் மற்றும் பணியாளர்கள் தொடர் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமணி நேரத்திற்கு ஒருமுறை நீர்வரத்து மற்றும் நீர் திறப்பு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.