ஆதாரமா? அப்புடின்னா? ஜிபி முத்து ஸ்டைலில் பல்டி அடித்த ரஜினி!

2018ம் ஆண்டு நடைபெற்ற தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு நடைபெற்ற பிறகு அங்கு சென்று நேரில் பார்வையிட்ட நடிகர் ரஜினிகாந்த் சென்னை விமான நிலையத்தில் சமூக விரோதிகளால் தான் போராட்டம் நடைபெற்றதாக பேட்டி கொடுத்திருந்தார். இந்த நிலையில் அவர் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையத்தில் சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டதற்கு தன்னிடம் எந்த ஒரு ஆதாரமும் இல்லை என்று அருணா ஜெகதீசன் ஆணையத்தில் விளக்கம் அளித்துள்ளார்.  ரஜினிகாந்த போன்ற பிரபலம் ஒரு கருத்தைத் தெரிவிக்கும்போது அவர் கூறும் தகவலின் ஆதாரத்தை உறுதி செய்திருக்க வேண்டும். பிரபலங்கள் பொறுப்பாக நடந்துகொள்ள வேண்டும் என அருணா ஜெகதீசன் ஆணையம் தெரிவித்துள்ளது.

 

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் மக்கள் பெரும் திரளாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்த நிலையில் 2018ம் ஆண்டு மே 22 அன்று பொது மக்கள் மீது காட்டுமிராண்டி தனமாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது,  இதில் 13 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.  இந்த சம்பவம் அந்த சமயத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.  தூத்துக்குடியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டிற்கு பெரும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் இது குறித்து விசாரிக்க நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஆணையம் ஒன்று அமைக்கப்பட்டது.  

தற்போது தமிழக சட்டமன்றத்தில் அருணா ஜெகதீசன் ஆணையம் அறிக்கை தாக்கல் செய்துள்ளது.  அதில், துப்பாக்கி சூட்டில் எந்த வித விதிமுறைகளும் கடைபிடிக்கப்படவில்லை என்று தெரிவித்துள்ளது.  உதவி எஸ்பி மற்றும் டிஐஜி உத்தரவில் நடத்தப்பட்டதாக கூறப்படும் துப்பாக்கி சூடு ஐஜிக்கு கூட தெரியவில்லை என்றும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.  மேலும் 17 காவலர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் படியும் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.