இங்கிலாந்தின் முன்னாள் விமானப்படை வீரர்களை பணியமர்த்தும் சீனா

லண்டன்,

இங்கிலாந்தின் விமானப்படையில் பணியாற்றி ஓய்வு பெற்ற விமானிகளை சீனா பெரும் தொகையை கொடுத்து தங்கள் பக்கம் இழுத்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

முன்னாள் விமானப்படை வீரர்கள் தங்களது நிபுணத்துவத்தை சீன ராணுவத்துக்கு வழங்க அவர்களை பயிற்சியாளர்களாக சீனா பணியமர்த்தி வருவதாக கூறப்படுகிறது. அப்படி இதுவரை சுமார் 30 முன்னாள் இங்கிலாந்து ராணுவ விமானிகள் சீன வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக அங்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே முன்னாள் ராணுவ விமானிகள் சீன ராணுவத்தில் பணிபுரிவதற்கு எதிராக இங்கிலாந்து உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. ஓய்வு பெற்ற இங்கிலாந்து விமானிகளின் மூலம் மேற்கத்திய நாடுகளின் ராணுவ விமானங்கள் மற்றும் விமானிகள் செயல்படும் விதம் உள்ளிட்ட தகவல்களை சீனா புரிந்து கொள்ளும் என்றும் ஒரு வேளை தைவானுடன் மோதல் ஏற்பட்டால் இந்த தகவல்கள் சீனாவுக்கு முக்கியமானவையாக இருக்கும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து சீனாவின் இத்தகைய ஆள்சேர்ப்பு திட்டங்களை நிறுத்த தீர்க்கமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.