காங்கிரஸ் தலைவர் யார்? வாக்கு எண்ணிக்கை தொடங்கியது!

அகில இந்திய
காங்கிரஸ்
கட்சியின் இடைக்கால தலைவராக சோனியா காந்தி செயல்பட்டு வருகிறார். காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தர தலைவரை நியமிக்க வேண்டும் என கட்சியின் மூத்த தலைவர்கள் நீண்ட நாட்களாக குரல் எழுப்பி வந்தனர். அதேசமயம், ராகுல் காந்தியை தலைவராக்கும் முயற்சிகளிலும் ஒரு குழு ஈடுபட்டு வந்தது. ஆனால் தலைவர் பதவியை ஏற்க ராகுல் சம்மதிக்கவில்லை.

இதையடுத்து காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப்பதிவு நேற்று முன் தினம் நடைபெற்றது. டெல்லியில் உள்ள அகில இந்திய காங்கிரஸ் தலைமை அலுவலகம் உட்பட நாடு முழுவதும் 65 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தன.

காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் 9,915 பேர் வாக்களிக்க தகுதி பெற்றிருந்த நிலையில், 9,497 பேர் வாக்களித்தனர். அனைத்து மாநிலங்களிலும் பதிவான வாக்குகள், டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை வாக்குப் பெட்டிகளின் சீல்கள் அகற்றப்பட்டு வாக்குகள் எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. மாலைக்குள் முடிவுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

காங்கிரஸ் தலைவர் தேர்தலில் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் ஆகிய இருவரும் போட்டியிடுகின்றனர். இருவரும் கடந்த சில நாட்களாக பல்வேறு மாநிலங்களுக்கும் பயணம் மேற்கொண்டு ஆதரவு திரட்டினர். தேர்தலில் 50 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெறுபவர் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், 24 ஆண்டுகளில் முதல்முறையாக காந்தி குடும்பத்தைச் சேராத ஒருவர் காங்கிரஸ் தலைவராக தேர்வுசெய்யப்பட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.