சட்டப்பேரவையில் எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் முடிவு எடுக்காததைக் கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்தனர். வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு காவல்துறை சட்டம் ஒழுங்கு பிரச்சனையை காரணம் காட்டி அனுமதி மறுத்தது. இருப்பினும் தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் கருப்புச் சட்டை அணிந்து வள்ளுவர் கோட்டத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் அதிமுகவின் மூத்த தலைவர்களான கேபி முனுசாமி, எஸ்பி வேலுமணி, தங்கமணி, செங்கோட்டையன், ஜெயக்குமார், கருப்பண்ணன், நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது ஆளும் திமுக அரசுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள், எதிர்கட்சி துணை தலைவர் விவகாரத்தில் சபாநாயகர் ஒருதலைபட்சமாக நடப்பதாக குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, தமிழக சட்டப்பேரவையில் ஜனநாயக படுகொலை நடப்பதாக குற்றம் சாட்டினார். தொடர்ச்சியாக திமுக அரசு மீது அவர் குற்றச்சாட்டுகளை அடுக்கிக் கொண்டிருந்தபோது, காவல்துறையினர் அதிமுகவினரை கைது செய்ய தொடங்கினர். இதனால் டென்ஷனான எடப்பாடி பழனிசாமி, காவல்துறையை நோக்கி ஆவேசமாக பேசத் தொடங்கினார்.
அப்போது, தொண்டர்களும் சேர்ந்து முழக்கத்தை எழுப்ப, அந்த இடத்தில் கூச்சல் குழப்பம் அதிகரித்து பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பை முடிக்கும் வரை காத்திருந்து அதிமுகவினரை காவல்துறையினர் கைது செய்து அழைத்து சென்றனர். எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுகவினர் ஒருபுறம் போராட்டம் நடத்திக் கொண்டிருக்க, ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவை நிகழ்வில் பங்கேற்றிருக்கிறார்.