இந்தி திணிப்புக்கு எதிராக மாபெரும் பேரணி; சீமான் அறிவிப்பு.. ஸ்தம்பிக்குமா சென்னை?

ஒன்றிய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் ஆட்சி மொழிக்கான நாடாளுமன்றக் குழுவின் தலைவராக அமைச்சர் அமித் ஷா உள்ளார். இந்த நிலையில், கடந்த ஏப்ரல் 7 இல் நாடாளுமன்ற எம்.பி.க்களின் ஆட்சி மொழிக்குழுவின் 37-வது கூட்டம் நடைபெற்றது. அப்போது எடுக்கப்பட்ட முடிவுகளின் அறிக்கையை குடியரசுத் தலைவருக்கு அமித் ஷா அனுப்பியிருந்த நிலையில், தொழில் கல்வி உள்ளிட்ட அனைத்து பிரிவுகளின் உயர்கல்வியிலும் மத்திய அரசு இந்தி மொழி திணிப்பு திணிப்பதான முடிவுகள் அதில் இடம்பெற்றுள்ளதாக இணையதளம் ஒன்றில் தகவல் வெளியானது.

அதனை தொடர்ந்து இந்தி பேசாத மாநிலங்கள் அமித் ஷாவுக்கு எதிராக கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். மேலும், இந்தி திணிப்பு, ஒரே நுழைவு தேர்வு ஆகியவற்றை திரும்ப பெற வலியுறுத்தி தமிழகத்திலும் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகிறது. திமுக இளைஞரணி தலைமையில் கடந்த சனிக்கிழமை மாநிலம் முழுக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த நிலையில், வரும் நவம்பர் 1 ஆம் தேதி சென்னையில் மாபெரும் இந்தி எதிர்ப்புப் பேரணி நடத்த நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் திட்டமிட்டுள்ளார்.

அதற்கான அறிவிப்பை இன்று அவர் வீடியோ வாயிலாக வெளியிட்டுள்ளார். கடந்த செவ்வாய்க்கிழமை இந்தி திணிப்புக்கு எதிராகத் தமிழ்நாடு சட்டப்பேரவையில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

அப்போது பேசிய முதல்வர் ஸ்டாலின், அமித்ஷா குழுவின் பரிந்துரைகள், இந்தி பேசாத மாநில மக்களுக்கு பெரும் பாதிப்பினை ஏற்படுத்தும். ஆட்சிக்கு வந்ததன் நோக்கமே இந்தி திணிப்புதான் என்று பாஜக நினைக்கிறது; ஒரே நாடு ஒரே மொழி என்ற பெயரில் பிற தேசிய மொழிகளை அழிக்க முயற்சி செய்கிறது என்றும் ஆங்கிலத்தை மொத்தமாக அகற்ற பாஜக அரசு முயற்சிகிறது என்றும் முதல்வர் கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.