ஊர்ந்து சென்று பதவி வாங்கியது யார்?… எடப்பாடியை அட்டாக் செய்த ஓபிஎஸ்

சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் ஓ.பன்னீர்செல்வம் மதுரை வந்தார். விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ஓ.பன்னீர்செல்வம், “தேவர் தங்க கவச விவகாரம் நீதிமன்றத்தில் உள்ளது. எனவே அது தொடர்பாக கருத்து தெரிவிக்க விரும்பவில்லை. நீதிமன்ற தீர்ப்புக்கு கட்டுப்படுவேன். ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை குறித்து சிலர் நீதிமன்றத்துக்கு செல்ல உள்ளதாக தெரிகிறது. எனவே அதை பற்றி கருத்து சொல்ல விருப்பம் இல்லை. 

ஊர்ந்து ஊர்ந்து சென்று பதவி பெற்றது யார்? என்று நாட்டு மக்களுக்கு தெரியும். தொண்டர்களுக்கு என்னை பற்றி தெரியும். பாவத்தை அவர்கள் செய்துவிட்டு பழியை என் மீது போடுகிறார்கள். அதிமுக உறுதியாக இணைய வேண்டும் என்பதே என் நோக்கம். அதிமுக தொண்டர்கள் இயக்கம் தொண்டர்களுக்கான இயக்கமாகத்தான் எம்ஜிஆர் இந்த இயக்கத்தை உருவாக்கினார். புரட்சித்தலைவி அம்மா பல தியாகங்களை செய்து இந்த இயக்கத்தை வழிநடத்தியுள்ளார்.

ஐம்பதாவது ஆண்டு பொன்விழாவை தொண்டர்கள் மகிழ்ச்சியோடு கொண்டாடி வருகின்ற நேரத்தில். பல பிரச்சனைகளை விரும்பத் தகாத பிரச்சனைகளை யார் உருவாக்கினார் என்பது நாட்டு மக்களுக்கும் தொண்டர்களுக்கும் நன்றாக தெரியும். என்னைப் பற்றி தொண்டர்களுக்கு நன்றாக தெரியும் தொண்டர்களை பற்றி எனக்கு நன்றாக தெரியும். உரிய நேரத்தில் அவர்களை அணுகுவேன் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

முன்னதாக, சட்டசபையில் எதிர்க்கட்சி துணைத்தலைவர் விவகாரம் தொடர்பாக சபாநாயகரின் நடவடிக்கையை கண்டித்து நேற்று வள்ளுவர்கோட்டம் அருகே அதிமுக தற்காலிக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்த சென்றபோது போலீசார்  அனுமதி அளிக்காததால் தர்ணாவில் ஈடுபட்டனர். 

இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அனைவரையும் போலீசார் கைது செய்தனர். அப்போது எடப்பாடி பழனிசாமி முதலமைச்சரின் ஆணைக்கிணங்க ஓபிஎஸ்ஸுக்கு ஆதரவாக சபாநாயகர் அப்பாவு செயல்படுகிறார். இது அநீதி. ஓபிஎஸ்ஸை பி டீமாக பயன்படுத்தி அதிமுகவை வீழ்த்த ஸ்டாலின் திட்டமிடுகிறார். ஸ்டாலினும், ஓ.பன்னீர் செல்வமும் அரை மணிநேரம் சந்தித்துப் பேசினர் என்று குற்றஞ்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.