தமிழகத்திலும் மூக்கை நுழைப்பேன்; தமிழிசை சவுந்தர்ராஜன் ஒரே போடு!

தெலங்கானா மாநில கவர்னராக தமிழிசை சவுந்தரராஜன் பொறுப்பேற்று 3 ஆண்டுகள் முடிந்து உள்ளது. இதை தொடர்ந்து 4வது ஆண்டு தொடக்க விழா குறித்த புத்தக வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் புத்தகத்தை வெளியிட்டு தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது:

எனது பணி இடையூறாக உள்ளதாக ஒரு சில நேரங்களில் ஆட்சியாளர்கள் நினைக்கின்றனர். குடியரசு தினத்தன்று என்னை கொடியேற்றவிடவில்லை. எனவே நான் ராஜ்பவனுக்குள் மட்டுமே கொடியேற்றினேன்.

அதேப்போல் ஆளுநர் உரையையும் ஆற்ற என்னை விடவில்லை. ஆனால் எப்படி இருந்தாலும், நான் எனது பணிகளில் இடையூறு செய்யவில்லை என்பது மட்டுமல்ல, இடைவெளியும் விடவில்லை என்பது தான் உண்மை.

என்னிடம் ஒருவர், ‘தமிழிசை எப்போது பார்த்தாலும் இங்கே தான் உள்ளார். இப்படி இருந்தால் தமிழிசை ஆளுநராக பொறுப்பு வகிக்கும் அந்த 2 மாநிலங்கள் என்ன ஆகும்?’ என, கேள்வி கேட்டார்.

அந்த 2 மாநிலங்களிலும் ஒன்றும் ஆகவில்லை. எப்போது பார்த்தாலும் தெலங்கானாவில் இருப்பதாக புதுச்சேரியிலும், புதுச்சேரியில் இருப்பதாக தெலங்கானாவில் கூறுகின்றனர்.

நான்.. புதுச்சேரிக்கு வந்தால் அண்ணன் நாராயணசாமி, ‘தெலங்கானாவில் விரட்டி விட்டார்களா? எப்போது பார்த்தாலும், புதுச்சேரியிலேயே இருக்கிறார்’ என்று கேட்கிறார்.

நான் இன்றைக்குச் சொல்கிறேன். நான் தெலங்கானாவிலும், புதுச்சேரியிலும் முழுமையாக பணியாற்றுகிறேன். தமிழ்நாட்டிலும், முழுமையான அன்பைச் செலுத்தி வருகிறேன்.

அதேப்போன்று, ‘அந்த மாநிலங்களில் உங்களை விரட்டுவதால் தமிழ்நாட்டில் ஏன் மூக்கை நுழைக்கின்றீர்கள்? வாலை நுழைக்கிறீர்கள்?’ என்று பலரும் என்னிடம் கேட்கின்றனர்.

தமிழ்நாட்டில் மூக்கையும் நுழைப்பேன்.. தலையையும் நுழைப்பேன்.. வாலையும் நுழைப்பேன்.. காலையும் வைப்பேன்… என்னை யாருமே, தடுக்க முடியாது. இவ்வாறு தமிழிசை சவுந்தரராஜன் பேசினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.