தஞ்சை: கனமழை காரணமாக தமிழகத்தில் 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தொடங்க உள்ள நிலையில், மழை பாதிப்புகளுக்கான தடுப்பு நடவடிக்கைகளை அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. தென் மேற்கு பருவமழை விரைவில் விடை பெற உள்ளது. இதன் தொடக்கமாக அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென் கிழக்கு வங்கக் கடல் பகுதியில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று உருவானது. இதன் காரணமாக தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர், மயிலாடுதுறை மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களில் நேற்று இரவு முதல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இந்நிலையில் 3 மாவட்டங்களுக்கும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர். கனமழை காரணமாக தஞ்சாவூர் மாவட்டத்தி்ற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக திருவாரூர் மாவட்டத்தி்ற்கு இன்று பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து ஆட்சியர் காயத்ரி உத்தரவிட்டுள்ளார். கனமழை காரணமாக மயிலாடுதுறை மாவட்டத்தி்ற்கு இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து ஆட்சியர் லலிதா உத்தரவிட்டுள்ளார்.