சென்னை: பணியின்போது உயிர் நீத்த காவலர்களுக்கு அக்டோபர் 21ம் தேதி, காவலர் நினைவு தினமான இன்று நாடு முழுவதும் அஞ்சலி செலுத்தப்படுகிறது. கடந்த 1959 ஆண்டு லடாக் பகுதியில் நடைபெற்ற சீனப்படை தாக்குதலில்10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் வீர மரணமடைந்தனர். அவர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையில் ஆண்டு தோறும் அக்டோபர் 21,ஆம் தேதி காவலர்கள் வீர வணக்க தினம் அனுசரிக்கப்படுகிறது. நாகை ஆயுதப்படை மைதானத்தில் உள்ள உயிர் நீத்தோர் நினைவு தூணுக்கு மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், எஸ்பி ஜவகர் கடலோர காவல்படை லெப்டினல் கணபதி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் பணியின் போது உயிர் நீத்த 264 காவலர்களின் நினைவாக மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காவல்படை சார்பாக 51 துப்பாக்கி குண்டுகள் முழங்க நினைவஞ்சலி மற்றும் வீர வணக்கம் செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து பணியின் போது உயிரிழந்த சுபாஷ் சந்திரபோஸ் காவலர் குடும்பத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் நிதியினை ஆட்சியர் அருண் தம்புராஜ் வழங்கினார்.
திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 குண்டுகள் முழங்க வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சி பகுதியில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தலைமையில் பணியின் போது உயிர்த்த காவலர்களுக்கான வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டது.
1959 ஆம் ஆண்டு லடாக் பகுதியில் ஹாட்ஸ்பிரிங்ஸ் என்கிற இடத்தில் மறைந்திருந்து சீன ராணுவத்தினரால் தாக்கப்பட்டதில் 10 மத்திய பாதுகாப்பு படை காவலர்கள் உயிரிழந்தனர். அதன் காரணமாக அக்டோபர் 21ஆம் தேதி இந்தியா முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் இதே நாளில் காவலர் வீரவணக்கம் நாள் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

திருப்பத்தூர் ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் வீரவணக்கம் நாளில் மாவட்ட ஆட்சித் தலைவர் அமர் குஷ்வாஹா கலந்து கொண்டு வீரவணக்க நாள் அனுசரித்தார். மேலும் திருப்பத்தூர் வாணியம்பாடி ஆம்பூர் மாவட்ட துணை காவல் கண்காணிப்பாளர்கள் ஆய்வாளர்கள் உதவி ஆய்வாளர்கள் காவலர்கள் என அனைவரும் கலந்து கொண்டனர்.