கர்நாடகாவில், குண்டும் குழியுமான சாலைகளின் நிலையை கண்டித்து, சாலையில் தேங்கி இருந்த வெள்ள நீரில் மக்கள் குளித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கர்நாடகா மாநிலத்தின் பல பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. பெங்களூருவில் மீண்டும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சாலைகளில் வெள்ள நீர் வடிந்து செல்ல வழியில்லாத சூழல் காணப்படுகிறது.
இதேபோன்று, தும்கூரு மாவட்டத்தின் பல இடங்களில் தெருக்களில் வெள்ள நீர் தேங்கி காணப்படுகிறது. மாவட்டத்தின் ஹலிகேரி பகுதியில் 4 கி.மீ. தொலைவுக்கு சாலை முழுவதும் வெள்ளநீர் தேங்கி காணப்படுகிறது.
இதனால், உள்ளூரில் இருந்து வேறு பகுதிகளுக்கு செல்லவோ அல்லது திரும்பவோ முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். இதனை தொடர்ந்து, ஹலிகேரி பகுதியில் வசிக்கும் மக்கள், சாலையில் மழை நீர் தேங்கியிருந்த இடத்திற்கு திரண்டு வந்தனர். அவர்களில் சிலர் அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி சேறு நிறைந்த நீரை வாளியில் எடுத்து உடலின் மீது ஊற்றிக் கொண்டனர்.
சாலைகளை சீர் செய்யும்படி அதிகாரிகளிடம் பல முறை வேண்டுகோள் வைத்து விட்டோம். ஆனால், அதில் பலனில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியுள்ளனர்.