ராஜபாளையம் அருகே தண்ணீர் தொட்டிக்குள் பெண் குழந்தை தவறி விழுந்து உயிரிழப்பு: போலீஸ் விசாரணை

விருதுநகர்: ராஜபாளையம் அருகே ஆவரம்பட்டியில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள ஆவரம்பட்டி கம்பர் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். மில் தொழிலாளியான இவருக்கு மாரீஸ்வரி என்ற மனைவியும், பசவேஸ்வரன், முத்துலட்சுமி என்ற இரண்டு குழந்தைகளும் உள்ளனர்.

இந்நிலையில், நேற்று வழக்கம்போல் மணிகண்டன் வேலைக்கு சென்றிருந்தார். மூத்த மகன் பள்ளிக்கு சென்றிருந்த சமயம், குழந்தை முத்துலட்சுமி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தது. குழந்தை தூங்குவதாக எண்ணி தாய் மாடியில் காய வைத்திருந்த துணியை எடுக்க சென்றிருந்ததாக கூறினர்.

அந்த சமயம் விழித்துக்கொண்ட குழந்தை தாயை காணாமல் தேடியபோது, அருகே தண்ணீர் இருந்த பிளாஸ்டிக் தொட்டிக்குள் எதிர்பாராத விதமாக தவறி விழுந்துள்ளது. துணியை எடுத்து விட்டு கீழே வந்த மாரீஸ்வரி, குழந்தையை காணாமல் தேடியபோது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் அசைவின்றி கிடந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளார்.

பதறியபடி குழந்தையை தூக்கிக்கொண்டு அரசு மருத்துவமனைக்கு சென்றபோது, குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து வடக்கு காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து ஒன்றரை வயது பெண் குழந்தை பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.