ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவர் குருபூஜை வருகிற அக்டோபர் 30ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நாளில், ஆண்டுதோறும் அரசு சார்பில் முதல்வர் மற்றும் அமைச்சர்கள், பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்கள், சமுதாய தலைவர்கள், பொதுமக்கள் திரண்டு வந்து முத்துராமலிங்க தேவர் நினைவிடத்தில் மரியாதை செலுத்துவது வழக்கமாக உள்ளது.
அந்த வகையில் இந்த ஆண்டு அக்.30ம் தேதி நடைபெற இருக்கும் தேவர் ஜெயந்திக்கான ஏற்பாடுகளை ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் தொடங்கி உள்ளது. இந்த நிலையில் தேவர் குருபூஜையில் பங்கேற்க பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக திடீரென தகவல் பரவியது.
இந்நிகழ்ச்சிக்காக தமிழகம் வருகை தரும் பிரதமர் மோடி விமானத்தில் மதுரை வந்து, மதுரையில் இருந்து ஹெலிகாப்டர் அல்லது காரில் பசும்பொன்னில் உள்ள முத்துராமலிங்க தேவர் நினைவிடம் செல்வதற்கு வாய்ப்பு உள்ளதாக ஊடகங்களிலும் செய்திகள் வெளியாகின.
முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி வருவதற்கான வாய்ப்பு இருப்பதாக திடீரென தகவல் வெளியானதால் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பான சூழல் நிலவியது.
இந்நிலையில் தான் தேவர் குருபூஜைக்கு பிரதமர் மோடி தமிழகம் வருகை தர உள்ளதாக பரவிய தகவல் கொஞ்சமும் உண்மை இல்லை என தமிழக பாஜக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கூறும்போது ‘பிரதமர் மோடி தமிழகம் வருவதாக வெளியாகி இருக்கும் தகவல் எங்கிருந்து பரவியது? என எனக்கு தெரியவில்லை’ என்று தெரிவித்து, பிரதமர் மோடி வருகை குறித்த செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
அதே சமயம் பிரதமர் மோடி பசும்பொன்னுக்கு வருவதாக பரவிய தகவல் தமிழகத்தில் பெற்ற வரவேற்பை தற்போது, பாஜக பயன்படுத்த திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி பிரதமர் மோடிக்கு பதிலாக அண்ணாமலையை இறக்கி பசும்பொன்னில் பிரகாசிக்க பாஜக கணக்கு போட்டுள்ள விபரம் வெளியாகி உள்ளது.
தங்கக்கவசம் விவகாரத்தில் மோதிக்கொண்டு அதிமுக பல்பு வாங்கி இருக்கும் நிலையில் தனது படை, பரிவாரங்களுடன் அண்ணாமலை வருகை தந்து, மாஸ் கெத்து காட்டப் போவதாக தகவல் பரவி வருவதால் தொண்டர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.