பிரதமர் மோடியை சந்திக்கும் பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் – எங்கு எப்போது தெரியுமா..?

இந்தோனேஷிய நாட்டில் அடுத்த மாதம் நடைபெற உள்ள ஜி – 20 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஐரோப்பிய நாடான பிரிட்டன் நாட்டின் புதிய பிரதமராக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், 42, நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். போரிஸ் ஜான்சன், லிஸ் டிரஸ் ஆகியோர் பிரதமர் பதவியில் இருந்து ராஜினாமா செய்ததை அடுத்து, கன்சர்வேட்டிவ் கட்சி தலைவராக, ரிஷி சுனக் தேர்வு செய்யப்பட்டு பிரிட்டன் பிரதமர் ஆனார்.

பிரிட்டன் வரலாற்றில், 200 ஆண்டுகளில், இளம் வயதில் ஒருவர் பிரதமர் ஆவது இதுவே முதன்முறை. மேலும், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் பிரிட்டன் நாட்டின் பிரதமர் ஆவதும் குறிப்பிடத்தக்கது. நேற்று பிரிட்டன் அரசர் மூன்றாம் சார்லஸை நேரில் சந்தித்த ரிஷி சுனக், அவர் அழைப்பின்படி, பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டு புதிய அரசை அமைத்துள்ளார்.

இந்நிலையில், இந்தோனேஷிய நாட்டில் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ள ஜி – 20 நாடுகள் மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியை, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தோனேஷிய நாட்டின் பாலி தீவில் அடுத்த மாதம் 15 ஆம் தேதி நடைபெற உள்ள ஜி – 20 மாநாட்டில் பிரதமர் நரேந்திர மோடி – பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் ஆகியோர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த மாநாட்டிற்கு இடையே, இரு நாட்டு தலைவர்களும் சந்தித்துப் பேச திட்டமிட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.

மேலும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனையும் சந்தித்து பேச, பிரிட்டன் பிரதமர் ரிஷி சுனக் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. பிரிட்டன் பிரதமராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை, ரிஷி சுனக் முதல் முறையாக சந்திக்க உள்ளதால் இந்த சந்திப்பு மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.