இதுதான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கும் லட்சணமா?- ஸ்டாலின் மீது பாயும் சீமான்!

கோவை உக்கடம் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை, கார் ஒன்றி்ல் எரிவாயு சிலிண்டர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் ஜமேசா முபின் என்ற நபர் உயிரிழந்தார். இந்த வழக்கு தொடர்பாக 5 பேர், சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டத்தின்கீழ் (UAPA) கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில், இந்த வழக்கின் விசாரணையை NIA வசம் ஒப்படைப்பது என தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நேற்று (அக்.26) நடைபெற்ற உயர்நிலைக் குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. ‘கோவை சிலிண்டர் வெடிப்பு வழக்கின் தன்மையையும் அதில் பன்னாட்டுத் தொடர்புகள் இருக்க வாய்ப்புள்ளதையும் கருத்தில்கொண்டு இவ்வழக்கை NIA-க்கு மாற்ற பரிந்துரைக்கப்படும்’ என்று முதல்வர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவிந்திருந்தார்.

முதல்வர் ஸ்டாலினின் இந்த முடிவை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வரவே்ற்றிருக்கும் நிலையில், தமிழக அரசின் இந்த முடிவை

கடுமையாக விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘கோவை, உக்கடம் அருகே வாகனத்தில் எரிகாற்று உருளை வெடித்துச் சிதறியதில் ஒருவர் பலியானது தொடர்பான வழக்கு விசாரணையை தேசியப்புலனாய்வு முகமையிடம் ஒப்படைத்திருக்கும் தமிழக அரசின் நடவடிக்கை மிகத்தவறான நிர்வாக முடிவாகும். தேசியப்புலனாய்வு முகமையானது பாஜகவின் கிளைப்பிரிவு போல செயல்பட்டு, இசுலாமிய மக்களைக் குறிவைத்து வேட்டையாடுவதாக நாடெங்கிலும் குற்றஞ்சாட்டுகள் வைக்கப்படும் நிலையில், மாநிலத் தன்னாட்சியென முழங்குகிற திமுக அரசு, தேசியப்புலனாய்வு முகமையின் வசம் இவ்வழக்கை ஒப்படைத்திருப்பது ஏற்கத்தக்கதல்ல!

காவல்துறையின் விசாரணை நிறைவடைவதற்கு முன்பாகவே, இவ்வழக்கை அவசர அவசரமாக தேசியப் புலனாய்வு முகமைக்கு மாற்ற வேண்டிய அவசியமென்ன வந்தது? இவ்வழக்கில் பன்னாட்டுத்தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதெனக் காரணம் கற்பிக்கும் திமுக அரசு, விசாரணை இறுதிக்கட்டத்தை எட்டுவதற்கு முன்பே, அத்தகைய முன்முடிவுக்கு எதன் அடிப்படையில் வந்தது? துப்பறிந்து விசாரணை செய்வதில் பெயர்பெற்ற தமிழகக் காவல்துறையிடமுள்ள வழக்கை தேசியப் புலனாய்வு முகாமையிடம் ஒப்படைப்பதன் மூலம் தனது இயலாமையை ஏற்றுக்கொள்கிறாரா? அல்லது காவல்துறையின் மீதே நம்பிக்கையை இழந்துவிட்டாரா முதல்வர்? எதற்காக இந்த முடிவு?

இந்த சம்பவம், மாநில உளவுத்துறையின் தோல்வியென குற்றஞ்சாட்டும் பாஜகவின் கூற்றை ஏற்றுக்கொண்டுதான் வழக்கை கைமாற்றிவிடுகிறதா மாநில அரசு? தனது பொறுப்பைத் தட்டிக்கழிக்க, தேசியப்புலனாய்வு முகமைக்கு வாசல்திறந்து விடுவது தான் மாநிலத் தன்னாட்சியைக் கட்டிக்காக்கிற லட்சணமா முதல்வரே? வெட்கக்கேடு!

ஆகவே, இவ்விவகாரத்தில் முறையான விசாரணை நடத்தி, அக்கோர நிகழ்வின் பின்புலத்திலுள்ள உண்மையை வெளிக்கொணர்ந்து, குற்றமிழைத்தவர்கள் எவராயினும் அவர்களைக் கடும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த வேண்டுமெனக் கோருகிற அதேவேளையில், தேசியப் புலனாய்வு முகமையிடம் வழக்கைத் தாரைவார்த்திருப்பதற்கு எனது எதிர்ப்பினைப் பதிவு செய்கிறேன். இத்தோடு, இக்கொடும் நிகழ்வை அடிப்படையாக வைத்து மதப்பூசலுக்கு வித்திட்டு, அரசியல் ஆதாயம் தேட முயலும் மதவாத சக்திகளின் சூழ்ச்சியை முறியடிக்க சனநாயக சக்திகள் அணிதிரள வேண்டுமென வலியுறுத்துகிறேன்’ என்று சீமான் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.