பாதுகாப்பான நாடு: தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக ஆப்கானிஸ்தான் கடைசி இடம்

உலகில் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலை ‘கேலப்’ (gallup survey) நிறுவனம் வெளியிட்டுள்ளது. இதில் 80 புள்ளிகள் எடுத்து பாதுகாப்பில் இந்தியா அதன் அண்டை நாடான பாகிஸ்தான், இலங்கைக்கு பின்னால் இடம் பெற்றிருக்கிறது.

சட்டம் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பில் சிறப்பாக செயல்படும் நாடுகளின் பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் ’கேலப்’ நிறுவனம் வெளியிட்டு வருகிறது. உலகளாவிய பகுப்பாய்வு நிறுவனமான கேலப் சர்வே வெளியிட்டுள்ள இந்த ஆண்டுக்கான பட்டியலில், தலிபான்களால் கைப்பற்றப்பட்ட ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு குறைந்த நாடாக கடைசி இடத்தில் உள்ளது. ஆப்கானிஸ்தான் தொடர்ந்து 3வது ஆண்டாக கடைசி இடத்தில் உள்ளது. மேலும் இந்தப் பட்டியலில் கிழக்கு ஆசியா மிகவும் பாதுகாப்பாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு ஆசியாவை தொடர்ந்து தென்கிழக்கு ஆசியா பாதுகாப்பான பகுதியாக கருதப்படுகிறது.

’கேலப்’ வெளியிட்டுள்ள இந்தப் பட்டியல் “மக்களின் தனிப்பட்ட பாதுகாப்பு உணர்வு மற்றும் குற்றம் மற்றும் பாதுகாப்பில் அவர்களின் தனிப்பட்ட அனுபவங்கள்” ஆகியவை தொடர்பாக நான்கு கேள்விகள் 120 க்கும் மேற்பட்ட நாடுகளில் 1,27,000 பேரிடம் கேட்கப்பட்டு அதில் கிடைத்த பதில்களின் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி இந்த வருடத்தில் பாதுகாப்பில் குறைந்த நாடுகளாக கடைசி 5 நாடுகளில் சியரா லியோன் (59 புள்ளிகள்), காங்கோ(58 புள்ளிகள்), வெனிசுலா (55 புள்ளிகள்),காபான் (54 புள்ளிகள்), ஆப்கனிஸ்தான் (51 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளது.

பாதுகாப்பில் சிறப்பாக உள்ள நாடுகளாக சிங்கப்பூர் (96 புள்ளிகள்), தஜிகிஸ்தான் (95), நார்வே (93), ஸ்விட்சர்லாந்து (92), இந்தோனேசியா (92 புள்ளிகள்) ஆகிய நாடுகள் உள்ளன. இதில் இந்தியா 80 புள்ளிகளை பெற்றுள்ளது. எனினும் பாதுகாப்பில் பாகிஸ்தான் மற்றும் இலங்கைக்கு கீழாகவே இந்தியா உள்ளது. அதேவேளையில் பிரிட்டன் மற்றும் வங்க தேசத்துக்கு மேலே இந்தியா இடம்பெற்றுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.