இரும்புத்திரை, ஹீரோ உள்ளிட்ட படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில், கார்த்தி நடித்த ’சர்தார்’ திரைப்படம் தீபாவளி விருந்தாக வெளியானது. படம் வெளியான நாள் முதல் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்ற சர்தார், பாக்ஸ் ஆஃபீஸ் கலெக்ஷனிலும் அசத்தியது. முதல் நாள் வசூல் சுமாராக இருந்தாலும், அடுத்தடுத்த நாள் வசூல் எகிறிக் கொண்டே சென்றது. குறிப்பாக, சர்தாருக்கு போட்டியாக களமிறங்கிய சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படம், கடும் விமர்சனங்களை பெற்றது. இது பாக்ஸ் ஆஃபீஸிலும் எதிரொலித்தால் சர்தாருக்கு மவுசு கூடியது.
வெள்ளிக்கிழமை – 6 கோடி ரூபாய் வசூலித்த சர்தார், சனிக்கிழமை -7 கோடி , ஞாயிறு – 8 கோடி, திங்கள் – 10.25 கோடி, செவ்வாய் -8.50 கோடி, புதன்கிழமை – 4.75 கோடி ரூபாய் வசூலித்திருக்கிறது. ஒட்டுமொத்தமாக உலகம் முழுவதும் 55 கோடி ரூபாயை வசூலித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரம் இந்தப்படத்துடன் வெளியிடப்பட்ட ‘பிரின்ஸ்’ திரைப்படம் தமிழகத்தில் வெறும் 22 கோடி மட்டுமே வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது.
பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட பிரின்ஸ் திரைப்படம் நெகடிவ்வான விமர்சனங்களை பெற்றதும், நேர்த்தியான கதையை கொண்ட சர்தாருக்கு ஜாக்பாட் அடித்ததற்கு மற்றொரு காரணம். இதனால் படக்குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர். நடிகர் கார்த்தி ஏற்கனவே ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த நிலையில், தமிழ்நாட்டில் படத்தை வெளியிட்ட ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனர் உதயநிதி ஸ்டாலினையும் நேரில் சந்தித்து மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.