4 எம்.எல்.ஏக்கள்… ரூ.100 கோடி டீல்… சிக்கிய பாஜக ஆபரேஷன்- ஆக்‌ஷனில் சைபராபாத் போலீஸ்!

தெலங்கானா மாநிலத்தில் முதல்வர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (TRS) கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இந்த கட்சியை தேசிய அளவில் விரிவுபடுத்தி பாரதிய ராஷ்திர சமிதி (BRS) என்று பெயர் மாற்றம் செய்தனர். கடந்த 2018ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் முடிவுகளின்படி, மொத்தமுள்ள 119 தொகுதிகளில் பாரதிய ராஷ்டிர சமிதி 88, காங்கிரஸ் 19, ஏஐஎம்ஐஎம் 7, தெலுங்கு தேசம் 2, பாஜக 1, அனைத்திந்திய பார்வர்டு பிளாக் 1, சுயேட்சை 1 என வெற்றி பெற்றனர்.

தென்னிந்தியாவில் தனது செல்வாக்கை அதிகரிக்க பாஜக தீவிரம் காட்டி வருகிறது. அடுத்த ஆண்டு தெலங்கானா மாநில சட்டமன்ற தேர்தல் நடைபெறும் சூழலில், இம்மாநிலத்தின் மீது பாஜகவின் கவனம் திரும்பியுள்ளது. இந்நிலையில் எம்.எல்.ஏக்களிடம் குதிரை பேரத்தில் ஈடுபட பாஜக திட்டமிட்டிருப்பதாக செய்திகள் வெளியாகின.

குறிப்பாக பாரதிய ராஷ்டிர சமிதி கட்சியின் ரோஹித் ரெட்டி, பீரம் ஹர்ஷ் வர்தன் ரெட்டி, ரேகா காந்தாராவ், குவ்வாலா பல்ராஜ் ஆகியோரை விலைக்கு வாங்க முயற்சி நடந்துள்ளது. இதற்காக பணம், ஒப்பந்தங்கள், பதவி உள்ளிட்டவை அளிக்க முன்வருவதாக டீலிங் நடைபெற்று வந்திருக்கிறது. இதுதொடர்பாக சைபராபாத் போலீசாருக்கு எம்.எல்.ஏக்களிடம் இருந்து கிடைத்த ரகசிய தகவலின் பேரில், ரங்கா ரெட்டியில் உள்ள பண்ணை வீட்டில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது பாஜகவை சேர்ந்த மூன்று பேர் கையும், களவுமாக சிக்கியதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவர்கள் ஹரியானாவை சேர்ந்த சதீஷ் ஷர்மா (33), திருப்பதியை சேர்ந்த டி.வி.ரமணா ராவ் (45), சரூர் நகரை சேர்ந்த நந்தகுமார் (48) என்பது தெரியவந்தது. இதுபற்றி பேசிய சைபராபாத் காவல்துறை சி.பி ஸ்டீபன் ரவிந்திரா, எம்.எல்.ஏக்களிடம் இருந்து கிடைத்த தகவலை அடுத்து பண்ணை வீட்டில் ரெய்டில் ஈடுபட்டோம்.

மூன்று பேர் சிக்கினர். ஒருவர் டெல்லியில் இருந்த படி எம்.எல்.ஏக்களிடம் டீலிங் பேசியுள்ளார். அவரது அறிவுறுத்தலின்பேரில் தான் மற்ற மூவரும் பண்ணை வீட்டிற்கு வந்துள்ளனர். அங்கு வைத்து டீலிங்கை முடிக்க திட்டமிட்டிருந்தனர். அதற்குள் நாங்கள் பிடித்துவிட்டோம் எனக் கூறினார். இந்த விவகாரம் தொடர்பாக பதிலளித்துள்ள பாஜக தேசிய துணைத் தலைவர் டி.கே.அருணா, சிக்கிய அந்த மூன்று பேருக்கும் பாஜகவிற்கும் எந்தவித சம்மந்தமும் இல்லை.

ரெய்டில் சிக்கிய பணம், ஆவணங்களிலும் எங்கள் கட்சிக்கு தொடர்பு கிடையாது. இதுதொடர்பாக தெலங்கானா மாநில அரசை தான் கேட்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இதனால் தெலங்கானாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கும் நிலையில் பாஜக தனது வேலையை ஆரம்பித்துவிட்டதா? இல்லை உட்கட்சி பூசலால் யாராவது செய்த சதிச் செயலா? என்ற கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.