கேரளாவில் பரவும் பறவை காய்ச்சலால் தமிழ்நாடு – கேரளா எல்லையில் உள்ள 6 சோதனை சாவடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஆலப்புழாவில் கடந்த வாரம் 1000-க்கும் மேற்பட்ட வாத்துகள் பறவை காய்ச்சல் நோயால் இறந்தது உறுதியானது. எனவே, நோய் பரவலை தடுக்கும் விதமாக 25,000 கோழிகளை அளிக்க கேரள அரசு முடிவு செய்தது. அண்டை மாநிலத்தில் பறவை காய்ச்சல் உறுதி செய்யப்பட்டு இருப்பதால் நாமக்கல் மற்றும் சுற்று வட்டாரங்களில் உள்ள கோழி பண்ணைகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோழி பண்ணையாளர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், கோவை மாவட்ட எல்லையில் உள்ள வாலையாறு, வேலந்தாளம், முள்ளி, ஆனைக்காட்டி, பட்டி சாலை, தோலம்பாளையம் ஆகிய சோதனை சாவடிகளில் கால்நடை மருத்துவர்கள் தலைமையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. முன்னெச்சரிக்கையாக கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. கோழி, முட்டை மற்றும் தீவனங்களை கேரளாவில் இறக்கி விட்டு திரும்பும் வாகனங்களின் எண் மற்றும் முகவரி பதிவு செய்யப்படுகிறது.