சட்டம் ஒழுங்கு பிரச்சினையா? அது மாநில அரசுகளின் பொறுப்பு – மோடி பேச்சு!

சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.

ஹரியாணாவின் சூரஜ்குண்ட் நகரில் மாநில உள்துறை அமைச்சா்கள், செயலாளா்கள், காவல்துறை டிஜிபிக்கள் பங்கேற்கும் இரண்டு நாள் சிந்தனை அமா்வு மாநாடு நேற்று தொடங்கியது. இந்த சிந்தனை அமா்வு கூட்டத்துக்கு அமித் ஷா தலைமை வகித்தாா்.

சிந்தனை அமா்வு கூட்டத்தில் இன்று (அக்டோபர் 28) இரண்டாம் நாள் அமா்வில் பிரதமா் நரேந்திர மோடி காணொலி வாயிலாக உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், “சட்டம், ஒழுங்கு மாநில அரசுகளின் பொறுப்பு. இது நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது. நாடு முன்னேறும்போது வளர்ச்சிப் பலன்கள் கடைசி நபருக்கும் சென்றடைவதை நாம் உறுதி செய்ய வேண்டும். பல்வேறு சவால்களுக்கு மத்தியில் பண்டிகைகளின்போது நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்துவது மாநிலங்களின் கடமை.

உள்நாட்டு பாதுகாப்பு விஷயங்களில் புதிய கொள்கைகளை உருவாக்குவதன் முயற்சியே சிந்தனை முகாம். சட்டம், ஒழுங்கு என்பது ஒரு மாநிலத்துடன் நின்றுவிடக் கூடியது அல்ல. குற்றங்கள் மாநிலங்களுக்கு இடையே மாறி வருகிறது. தொழில்நுட்பத்தால், குற்றவாளிகள் இப்போது மாநிலங்களில் குற்றங்களைச் செய்ய அதிகாரம் பெற்றவர்களாக உள்ளனர். எல்லை தாண்டிய குற்றவாளிகள் தொழில்நுட்பத்தை தவறாக பயன்படுத்துகின்றனர்.

கடந்த சில ஆண்டுகளில், அனைத்து மாநில அரசுகளும் பயங்கரவாதத்தை தகர்ப்பதற்கான நடவடிக்கைகளில் பொறுப்புடன் செயல்பட்டன. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளை திறம்பட மேற்கொள்ளும் வகையில் அனைத்து மாநிலங்களிலும் தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அலுவலகங்கள் அமைக்கப்பட வேண்டியது அவசியம்” என்று பிரதமர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.