கோவையில் பந்த்; ஆனா அது அண்ணாமலைக்கே தெரியாது – பாஜக துணை தலைவர்

கோவையில் கார் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக, கோவை மாவட்டத்தில் வரும் திங்கட்கிழமை பாஜக சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்புக்கு தடைவிதிக்க கோரி கோவையை சேர்ந்த தொழிலதிபர் வெங்கடேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். அந்த வழக்கில் எதிர் மனுதரராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சேர்க்கப்பட்டிருந்த நிலையில்,நீதிமன்ற விசாரணையின்போது  அந்த அழைப்பு மாநில தலைமையால் அறிவிக்கப்படவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

அது குறித்து வழக்கறிஞரும் பாஜக மாநில துணை தலைவருமான பால் கனகராஜ் சென்னை தி நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், கோவை பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள் அறிவித்த பந்த்துக்கு நீதிமன்றம்  தடை விதிக்கவில்லை பொதுநல வழங்கு நீதிமன்றத்தில் வந்தது அதில் 5ஆவது எதிர்மனுதரராக அண்ணாமலையின் பெயர் இருந்தது. ஆனால் கட்சியின் மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலை பந்த் அழைப்பு விடுத்தார் என பொதுநல வழக்கு தொடரப்பட்டது தவறு.

பந்த் தொடர்பாக தமிழக பாஜக எந்த அறிவிப்பையும் அறிவிக்கவில்லை. கோவை மாவட்ட பொறுப்பாளர்களும், சி.பி.ராதாகிருஷ்ணனும் அங்கு நடைபெற்ற சம்பவம் தொடர்பாக பொதுமக்களை பந்த்க்கு அழைத்தனர். ஆனால் பாஜக தலைவர் அண்ணாமலை பந்த் அறிவிக்கவில்லை 

ஒவ்வொரு மாவட்ட பொறுப்பாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நிர்பந்தம் செய்ய முடியாது. அந்த வகையில் கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் அதனை அறிவித்துள்ளார்கள். பந்த் சார்பாக பாஜக தலைவருக்கு  எந்த தகவலும் தரவில்லை. அதேவேளையில் நீதிமன்றத்தில் பந்த்க்கு தடை கேட்டபோது நீதிமன்றம் தடை விதிக்கவில்லை” என்றார்.

துணை தலைவர் இப்படி கூறினாலும், எப்படி மாநில தலைவருக்கு எந்த தகவலும் தராமல் ஒரு கட்சியின் மாவட்ட பொறுப்பாளர் பந்த்துக்கு அழைப்பு விடுப்பார் எனவும், அப்படி அவர் மாநில தலைவருக்கு எந்த தகவலும் கொடுக்கவில்லை என்றால் தமிழக பாஜகவின் தலைவராக அண்ணாமலை எதற்கு இருக்கிறார் எனவும் பலர் கேள்வி எழுப்பிவருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.