கோவை செல்லும் அண்ணாமலை!

கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார்.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது சட்டவிரோத செயல்கள் தடுப்பு (உபா) சட்டம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், நாட்டு வெடிகுண்டு தயாரிக்க பயன்படும் ரசாயனப் பொருட்கள், வயர்கள் உள்ளிட்டவைகளை ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

இதனிடையே, கோவை உக்கடம் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவம் குறித்து ஆலோசனை மேற்கொண்ட முதல்வர் ஸ்டாலின், இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

இந்த நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கோவை செல்லவிருப்பதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “கோவையில் நடந்த தற்கொலை படை தாக்குதல் விபத்தாக மாறி பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது கோட்டை ஈஸ்வரன் அருளால். கோவை மாவட்ட பாஜக நிர்வாகிகள் மற்றும் மூத்த தலைவர்களுடன் நாளை மறுநாள், அக்டோபர் 31ஆம் தேதி நம்மைக் காத்து அருளிய கோட்டை ஈஸ்வரனை தரிசிக்க வருகிறேன்.” என்று பதிவிட்டுள்ளார்.

முன்னதாக, கோவை கார் வெட்ப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சிலிண்டர் வெடிப்பு பயங்கரராதிகளின் தற்கொலைப்படை தாக்குதலாக இருக்கலாம் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார். மேலும், சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.