மனைவியின் தலையில் கல்லை போட்டு கொன்ற கணவருக்கு ஆயுள் தண்டனையை உறுதி!

தூங்கி கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை போட்டு கொலை செய்த கணவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.  கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த மது, தனது மனைவி கமலாவுடன் அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார்.  கடந்த 2014ம் ஆண்டு ஏப்ரல் 17ம் தேதி குடிபோதையில் வீட்டுக்கு வந்த மது, மனைவியிடம் சண்டை போட்டுள்ளார்.  இதனால் ஆத்திரமடைந்த மனைவி கமலா, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு தனது தந்தை வீட்டிற்கு சென்றுள்ளார். 

உறவினர்கள் சமசரம் செய்து  அனுப்பி வைத்ததால், வீடு திரும்பினார்.  குடிபோதையில் வீடு திரும்பிய மது, தூங்கிக் கொண்டிருந்த மனைவியின் தலையில் கல்லை தூக்கி போட்டுள்ளார். ரத்த வெள்ளத்தில் கிடந்த அவரை உறவினர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். சிகிச்சை பலனின்றி கமலா உயிரிழந்தார். இதுதொடர்பான  வழக்கை விசாரித்த கிருஷ்ணகிரி மகளிர் நீதிமன்றம்,  மதுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. 

இதனை எதிர்த்து மது சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். அதில், சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சிகள் யாரும் இல்லை எனவும் சந்தர்ப்ப  சாட்சியங்களின் அடிப்படையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதாகவும் தெரிவித்திருந்தார். வழக்கை விசாரித்த நீதிபதிகள் பி.என்.பிரகாஷ் மற்றும் டீக்காராமன் அமர்வு, மது தரப்பு வாதத்தை ஏற்க மறுத்து அவருக்கு விதிக்கப்பட்ட ஆயுள் தண்டனையை உறுதி செய்து, அவரது மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.

மேலும் படிக்க | குடித்துவிட்டு பேருந்து ஓட்டினால்…. போக்குவரத்து கழகத்தின் எச்சரிக்கை 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.