ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்த விபத்தில் 32 பேர் பலி… குஜராத்தில் பெருந்துயர் சம்பவம்

குஜராத் மாநிலம், மோர்ஹி பகுதியில் மச்சு என்ற பெயரிலான ஆறு ஓடிக் கொண்டிக்கிறது. இந்த ஆற்றை கடக்க அப்பகுதியில் கேபிள் பாலம் கட்டப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக பயன்பாட்டில் உள்ள இன்த பாலத்தின் வழியாக நாள்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் ஆற்றை கடந்து சென்றுக் கொண்டிருந்தனர்.

வழக்கம்போல் இன்று மாலையும் சத் பூஜையில் பங்கேற்பதற்காக 500 க்கும் மேற்பட்டோர் பாலத்தில் நடந்து சென்றுக் கொண்டிருந்தனர். அப்போது யாரும் எதிர்பாராத விதமாக பாலம் இடிந்து விழுந்தது.

இந்த விபத்தால் பாலத்தில் இருந்து ஆற்றில் விழுந்த பலரின் நிலை குறித்த அச்சம் எழுந்தது. அத்துடன் அவர்கள் மீது பாலத்தின் இடிபாடுகளும் விழுந்துள்ளதால் பலர் படுகாயம் அடைந்திருக்கலாம் என்று அஞ்சப்பட்டது.

இந்த நிலையில், பாலம் இடிந்த விபத்தில் இதுவரை 32 பேர் பலியாகி இருப்பது தெரிய வந்துள்ளதாக போவீசார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் மூழகி உள்ளவர்களை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் இறங்கி உள்ளனர். ஆனாலும் இன்னும் குறைந்தது 100 பேர் ஆற்று நீரில் முழ்கி இருக்கலாம் அஞ்சப்படுவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

இழப்பீடு அறிவிப்பு: இந்த துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு பிரதமரின் தேசிய பேரிடர் நிதியில் இருந்து தலா 2 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் இழப்பீடாக அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இதேபோன்று, விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா 4 லட்சம் ரூபாயும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரமும் நிதியுதவி வழங்கப்படும் என்று குஜராத் மாநில அரசு அறிவித்துள்ளது. அத்துடன் இந்த விபத்துக்கான பொறுப்பையும் மாநில அரசு ஏற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5 நாட்களுக்கு முன்:
குஜராத்தில் சிறப்புமிக்க பாலங்களில் ஒன்றாக கருதப்படும் இந்த கேபிள் பாலம், புனரமைப்பு பணிகளுக்கு பின் கடந்த 26 ஆம் தேதி (அக்டோபர் 26) தான் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக மீண்டும் திறக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

முதல்வரிடம் பேசிய பிரதமர்:
பல்வேறு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக இன்று குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, விபத்து குறித்து மாநில முதல்வர் பூபேந்திர படேலிடம் தொலைபேசியில் கேட்டறிந்தார். அத்துடன் மீட்பு நடவடிககைகளை துரிதப்படுத்துமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.