கறுப்பு கொடி காட்டியவர்களின் மனதை வெல்வேன்..! குஜராத்தில் கெஜ்ரிவால் உரை

நவ்சாரி: எனக்கு எதிராக கறுப்பு கொடி காட்டியவர்களின் மனதை வெல்வேன் என்று குஜராத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசினார். குஜராத் சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வரும் சில நாட்களில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் ஆகியோர் தீவிர பிரசாரம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று நவ்சாரி மாவட்டம் சிக்லியில் அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் காரில் சென்று கொண்டிருந்த போது, மக்களை நோக்கி இருவரும் கையசைத்தனர். அப்போது சாலையோரம் நின்றிருந் மக்கள் மற்றும் பாஜக ஆதரவாளர்கள், கெஜ்ரிவாலுக்கு எதிராக கறுப்புக்கொடி காட்டினர். தொடர்ந்து பிரசார மோடையை இரு தலைவர்களும் அடைந்தனர். அவர்கள் மேடையில் பேசிக் கொண்டிருந்த போது, அங்கு கூடியிருந்தவர்கள் ‘மோடி, மோடி’ என்று முழக்கங்களை எழுப்பினர்.

இதற்கிடையே கெஜ்ரிவால் பேசுகையில்:
எனக்கு எதிராக கறுப்புக் கொடி காட்டுபவர்களை எனது சகோதரர்களாகக் கருதுகிறேன். நான் அவர்களின் மனதை வெல்வேன். அவர்களை எனது கட்சியில் சேர்க்க முயற்சிகளை மேற்கொள்வேன். எந்த கட்சிக்கு வேண்டுமானாலும் மக்கள் வாக்களிக்கலாம்; ஆனால் ஆம் ஆத்மி கட்சிக்கு வாக்களித்தால், அவர்களின் குழந்தைகளுக்கு இலவச மற்றும் தரமான கல்வி மற்றும் மருத்துவம் கிடைக்கும். ஆளும் பாஜக அரசை மக்கள் வீட்டிற்கு அனுப்ப வேண்டும்; எனவே ஆம் ஆத்மிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்’ என்றார்.

குஜராத்தில் மோடி
குஜராத் சென்றுள்ள பிரதமர் மோடி, இன்று சி-295 விமானத் தயாரிப்பு ஆலைக்கு அடிக்கல் நாட்டுகிறார். நாட்டின் முதல் உள்துறை அமைச்சர் வல்லபாய் படேலுக்கு அஞ்சலி செலுத்துகிறார். பின்னர் பஞ்சமஹால் மாவட்டத்தில் உள்ள ஜம்புகோடாவில் பல்வேறு வளர்ச்சித் திட்டங்களை தொடங்கி வைக்கிறார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.