கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி அன்று, விபத்தில் காயமடைந்த 23 வயதான சஃபினா என்ற பெண், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்டபோது, அவர் 40 நாள்கள் கருவுற்றிருப்பது தெரியவந்தது. புலந்த்சரில் அவருக்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து, அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துவரப்பட்டுள்ளார்.
சமீபத்தில் அவருக்கு நரம்பியல் அறுவை சிகிச்சையும் மேற்கொள்ளப்பட்டது. தொடர்ந்து அவர் சுய நினைவு இழந்து கோமாவில் இருந்து வந்தார். அவர் கர்ப்பமுற்று 18 வாரங்கள் கழித்து, அவரிடம் நடத்தப்பட்ட அல்ட்ராசவுண்டு ஸ்கேனில் குழந்தை ஆரோக்கியமாக இருப்பது தெரியவந்தது.
இந்நிலையில், கடந்த அக். 22ஆம் தேதி சஃபினா இயல்பான முறையில் குழந்தையை பிரசவித்துள்ளார். இருப்பினும், அவர் தொடர்ந்து சுய நினைவின்றி உள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. அவர் சுய நினைவை திரும்ப பெற 10 முதல் 15 சதவீதம்தான் வாய்ப்பிருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
“ஆரம்ப காலக்கட்டத்தில், அவரது கர்ப்பத்தை கலைத்துவிடலாமா அல்லது குழந்தை பிறப்பு வரை முயற்சித்து பார்க்கலாமா என்ற குழப்பம் இருந்தது. அல்ட்ராசவுண்டு பரிசோதனையில், கருவில் இருந்த குழந்தைக்கு எவ்வித பாதிப்பும் இல்லாத காரணத்தால், குழந்தை பிறப்பு வரை முயற்சிக்கலாம் என முடிவெடுக்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் பரிந்துரைக்கப்பட்டது.
மேலும், குழந்தையை கலைக்கலாமா அல்லது பிரசவம் வரை தொடரலாமா என்ற முடிவை குடும்பத்தினரிடமே விட்டுவிட்டோம். ஆனால், வழக்கத்திற்கு மாறாக அவர்கள் குடும்பம் பிரசவம் வரை முயற்சித்து பார்க்க ஒப்புக்கொண்டது. எய்ம்ஸ் மருத்துவனையில் எனது 22 ஆண்டுகால பணிக்காலத்தில் இப்படி ஒரு சிகிச்சையை முதல் முறையாக செய்தேன்” என டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிந் நரம்பியல் அறுவை சிகிச்சை வல்லுநரான மருத்துவர் குப்தா தெரிவித்தார்.