தீபாவளி ஸ்வீட் + கவரில் ரூ.2.5 லட்சம்… நம்பாதீங்க இது காங்கிரஸ் டூல்கிட்- புலம்பும் பொம்மை!

கர்நாடக மாநிலத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த 24ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட்ட நிலையில் முதல்வர் அலுவலகம் மீது
காங்கிரஸ்
பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. அதாவது, முக்கியமான ஊடகங்களில் பணியாற்றும் குறிப்பிட்ட பத்திரிகையாளர்களுக்கு தீபாவளி ஸ்வீட் பாக்ஸ் மற்றும் கவரில் ஒரு லட்ச ரூபாய் முதல் 2.5 லட்ச ரூபாய் வரை ரொக்கப் பணம் வைத்து கொடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பத்திரிகை நண்பர்களுக்கு லஞ்சம் கொடுத்து தங்களுக்கு வேண்டிய காரியத்தை முதல்வர் பசவராஜ் பொம்மை அரசு நிறைவேற்றப் பார்க்கிறது. இது மிகப்பெரிய குற்றம். உடனடியாக முதல்வர் பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக கர்நாடக லோக் ஆயுக்தாவிடம் ஜனாதிகார சங்கர்ஷ பரிஷத் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் புகார் அளித்துள்ளது.

சில பத்திரிகையாளர்கள் தங்கள் நிறுவனத் தலைமையிடம் தெரிவித்துவிட்டு ரொக்கப் பணத்தை திருப்பி கொடுத்துவிட்டதாக சொல்லப்படுகிறது. இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பூதாகரமாக வெடித்துள்ளது. பல்வேறு அரசியல் கட்சிகளும் இதுபற்றி பேசத் தொடங்கியுள்ளனர். இதற்கு முதல்வர் பசவராஜ் பொம்மை மறுப்பு தெரிவித்துள்ளார். இப்படி தீபாவளிக்கு ரொக்கப் பணத்தை பரிசாக அளிக்குமாறு யாரிடமும் அறிவுறுத்தவில்லை.

என் மீது வீண் பழி போடுகின்றனர். இதை வன்மையாக கண்டிக்கிறேன். லோக் ஆயுக்தாவிடம் புகார் அளிக்கப்பட்டிருக்கிறது அல்லவா? அவர்கள் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வருவார்கள். அப்போது தெரியும் தவறு நடந்திருக்கிறதா? இல்லையா? என்று. இது காங்கிரஸ் டூல் கிட்டின் வேலை தான் எனக் கூறினார். மேலும் பேசுகையில், காங்கிரஸ் கட்சி ஆட்சியில் இருந்த போது என்னென்ன பரிசுப் பொருட்கள் அளிக்கப்பட்டன என்று அனைவருக்கும் தெரியும்.

இதுபற்றி ஊடகங்களிலும் செய்திகள் வெளியானதாக தெரிவித்தார். எனவே தனது அலுவலகத்தில் இருப்பவர்கள் மீதே விசாரணைக்கு உத்தரவிடுவீர்களா? என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, லோக் ஆயுக்தா அமைப்பினரிடம் புகார் இருக்கிறது. அதுவும் ஒரு போலீஸ் ஏஜென்ஸி தான். விசாரணையில் உண்மை தெரியவரும் என்றார்.

முதல்வர் பசவராஜ் பொம்மை அளித்த பேட்டியில் டூல்கிட் என்ற வார்த்தையை பயன்படுத்தினார். இதை எங்கேயே கேட்டதை போல இருக்கிறதா? வேறெங்குமில்லை. வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்திய போது டூல்கிட் பயன்படுத்தி தான் அடுத்தகட்ட நகர்வுகளை முன்னெடுத்ததாக மத்திய அரசு குற்றம்சாட்டியது.

அதாவது, ட்விட்டரில் ஹேஷ்டேக் பதிவிடுவது, பொது கூடங்களில் கூடி கோஷங்கள் எழுப்புதல், அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுக்கு கூட்டாக இ-மெயில் அனுப்புவது, போஸ்டர்கள் உருவாக்குதல் உள்ளிட்டவை தொடர்பான வழிகாட்டுதல்கள் அடங்கிய ஆவணத்தை தான் டூல்கிட் என்கிறோம். இதைத்தான் கர்நாடக மாநில காங்கிரஸ் கையிலெடுத்து பொய்யான தகவலை பரப்புவதாக பொம்மை குற்றம்சாட்டியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.