அவதூறு பரப்பும் அண்ணாமலை: காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!

கோவை டவுன்ஹால் பகுதி கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் முழுவதும் சேதமடைந்ததோடு, காரில் இருந்த உக்கடம் பகுதியை சேர்ந்த ஜமேஷா முபின் என்ற இளைஞர் உடல் கருகி உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்ட போலீசார், ஜமேஷா முபினின் கூட்டாளிகள் 5 பேரை கைது செய்துள்ளனர். இந்த விவகாரத்தை தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரிக்க முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்துள்ளார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.

கோவை கார் வெடிப்பு சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சிலிண்டர் வெடிப்பு பயங்கரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதல் என்று கூறிய தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, அடுக்கடுக்கான பல கேள்விகளை முன்வைத்தார். மேலும், சில ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன், தமிழக அரசும், காவல்துறையும் அலட்சியமாக செயல்படுவது போன்ற குற்றச்சாட்டையும் அவர் முன்வைத்து வருகிறார். இதுதொடர்பாக தொடர்ந்து பல கருத்துக்களையும் அவர் தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில், கோவை கார் வெடிப்பு விவகாரத்தை வைத்து தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை மீது அவதூறு பரப்பும் வகையில் செயல்படும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து சமூக ஆர்வலர் தேவராஜன் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் அளித்துள்ள புகாரில், “கோவையில் கார் வெடிப்பு விவகாரம் தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு தகவல்களை தெரிவித்து வருகிறார். அதில், தமிழக அரசு மற்றும் தமிழக காவல்துறை பெயருக்கு கலங்கம் ஏற்படுத்த வேண்டும் என்று தீய நோக்கோடு ஊடகங்களில் தேவையற்ற அவதூறுகளையும் பொய் பிம்பத்தையும், உண்மையில்லாத சம்பவத்தை மிகைபடுத்தப்பட்ட செய்திகளையும் வெளியிட்டு வருகிறார்.” என கூறப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்களிடைய அச்சத்தை ஏற்படுத்தி ஒற்றுமையை சீர்குலைத்து வரும் பாஜக தலைவரும், முன்னாள் கர்நாடக காவல் அதிகாரியான அண்ணாமலை மீது தேசிய பாதுகாப்பு சட்டபிரிவு, இந்திய தண்டனை சட்டப்பிரிவு தகவல் தொழில்நுட்ப சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்து கைது செய்ய வேண்டும் எனவும் அவர் தனது புகாரில் கோரியுள்ளார்.

முன்னதாக, தமிழக காவல்துறையும் அவதூறு கருத்துக்களை பரப்ப வேண்டாம் என அண்ணாமலைக்கு கண்டனம் தெரிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, மாநில அரசு மீது குற்றம் குறை காண்பிக்கவோ மாநில அரசுக்கு தொந்தரவு அளிக்க வேண்டும் என்பதற்காகவோ கருத்துக்களை கூறவில்லை என கோவையில் அண்ணாமலை தெரிவித்திருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.