பெண்ணாடம்: பெண்ணாடம் பேரூராட்சிக்கு உட்பட்ட பழைய மற்றும் புதிய பேருந்து நிலைய பகுதிகளில் பேருந்து கால அட்டவணை வைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெண்ணாடம் வழியாக கடலூர், திருச்சி, சென்னை, கும்பகோணம் மற்றும் கிராமப்புற அரசு பேருந்துகள் அதிகளவு சென்று வருகின்றன. வெளியூர்களில் இருந்து வரும் பயணிகளுக்கு பேருந்துகள் வரும் நேரம் தெரியாமல், அருகில் உள்ள பெட்டி கடைகள், பூக்கடைகளில் சென்று கேட்கின்றனர். அவர்கள் தங்களுக்கு தெரியாது என்று கூறிவிடுகின்றனர். சிலர் பேருந்து நேர காப்பாளரை விசாரித்து தெரிந்து கொள்கின்றனர்.
விவரம் தெரியாதவர்கள் செய்வதறியாது காத்திருக்கின்றனர். தற்போதுள்ள நகரின் வளர்ச்சி, போக்குவரத்தின் அதிகரிப்பை கருத்தில் கொண்டு பயணிகளின் நலன் கருதி சம்மந்தப்பட்ட பகுதிகளில் பேருந்து கால அட்டவணையை வைக்க வேண்டும் என பயணிகள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.