மழை, வெள்ளம் தொடர்பாக தனிநபர் தெரிவிக்கும் செய்திகளை பொதுமக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது: வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன்

வேலூர்: மழை, வெள்ளம் தொடர்பாக தனிநபர் தெரிவிக்கும் செய்திகளை பொதுமக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது எனவும் அரசின் மூலம் வெளியிடப்படும் செய்திகளை மட்டும் பொதுமக்கள் எடுத்துக்கொள்ள வேண்டும் எனவும் வேலூர் மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை – 2022 பருவகாலம் 29.10.2022 முதல் தொடங்கியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை -2022 பருவ காலத்தில் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளன.

வேலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளாக 23-இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேற்படி வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் போது அவர்களை தங்க வைக்க 26 நிவாரண மையங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த வெள்ளத்தால் பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் மீட்பு பணிகளை மேற்கொள்வதற்காக 24-பெண்கள் உட்பட மொத்தம் 239 முதல்நிலை பொறுப்பாளர்கள் கண்டறியப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வருவாய்த் துறையின் மூலம் வேலூர் மாவட்டத்தில் வட்ட அளவில் பல்துறை அடங்கிய 6- குழுக்களும். உள்வட்ட அளவில் 20-குழுக்களும் அலுவலர்கள் அமைக்கப்பட்டு செயல்பாட்டில் உள்ளன. இந்த குழுக்களில் வருவாய்த் துறை, ஊரக வளர்ச்சித்துறை, வேளாண்மைத் துறை உள்ளிட்ட 11 துறைகளின் அலுவலர்கள் இடம் பெற்றுள்ளனர். இந்த குழுவினர் மழை காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை அவர்களது துறை தலைமைக்கு தெரியப்படுத்தி உடனுக்குடன் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வார்கள்.

மழை வெள்ளத்தினால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் கட்டணமில்லா தொலைபேசி எண். ‘1077’ மற்றும் 0416-2258016′ ஆகிய தொலைபேசி எண்களில் மழை வெள்ள பாதிப்புகளை தெரிவிக்கலாம். இந்த மழை வெள்ள பாதிப்புகளை உடனடியாக சீரமைக்கவும், அவற்றின் நிலை குறித்து கண்காணிக்கவும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கட்டுப்பாட்டு அறை ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையில் 24-மணி நேரமும் சார்புத் துறை அலுவலர்கள் பணியில் இருப்பார்கள். மேலும் அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்களிலும் 24-மணி நேரமும் இயங்கக் கூடிய வகையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன. வேலூர் வட்டாட்சியர் அலுவலக கட்டுப்பாட்டு அணைக்கட்டு வட்டாட்சியர் அலுவலகம்-9445461811. கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம்-9629472352.

குடியாத்தம் வட்டாட்சியர் அலுவலகம் 04171-221177 மற்றும் பேர்ணாம்பட்டு வட்டாட்சியர் அலுவலகம் 04171-292748 பொதுமக்கள் மழை வெள்ள பாதிப்புகள் குறித்து இந்த தொலைபேசி எண்களிலும் தெரிவிக்கலாம். இவை அந்தந்த தலைமையிடத்து துணை வட்டாட்சியர் நிலையில் கண்காணிக்கப்படும்.

மழை, வெள்ளம் தொடர்பாக தனிநபர்கள் தெரிவிக்கும் செய்திகளை பொதுமக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது எனவும், அரசின் மூலம் வெளியிடப்படும் செய்திகளை மட்டும் பொதுமக்கள் எடுத்துக் கொள்ள வேண்டும் எனவும். தேவையற்ற வகையில் அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் வெளியிடப்படும் எந்தவிதமான செய்திகளையும் பொதுமக்கள் கருத்தில் கொள்ளக்கூடாது எனவும் வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.

மேலும் மழை வெள்ளம் செல்லும் சாலைகள் மற்றும் பாலங்களில் பொதுமக்கள் செல்ல வேண்டாம் எனவும், மழை காலங்களில் மின்சாதன பொருட்களை பாதுகாப்பான முறையில் உபயோகப்படுத்த வேண்டும் எனவும், தேவையான அளவிற்கு மெழுகுவர்த்தி மற்றும் தீப்பெட்டிகளை இருப்பில் வைத்திருக்க வேண்டும் எனவும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை குளம், குட்டை மற்றும் எரி ஆகிய நீர்தேங்கியுள்ள பகுதிகளில் விளையாடவோ, செல்பி புகைப்படம் எடுக்கவோ அனுமதிக்கக்கூடாது எனவும் மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.