ஆவின் பால் விலை எதிரொலி: தமிழகத்தில் டீ விலை மீண்டும் உயர்வு..?

ஆவின் பால் விலை உயர்வையொட்டி ”சொல்வதையும் செய்வோம் சொல்லாததையும் செய்வோம் இந்திய அரசிற்கே வழிகாட்டும் “திராவிட மாடல்” – இது தானோ? என்று

இளைஞர் அணி தலைவர் யுவராஜா கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியது; நம்பிக்கை வைத்து வாக்களித்த மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை “திராவிட மாடல்” அரசு செய்ய உள்ளதோ? தேர்தலின் போது சொல்வதையும் செய்வோம்! சொல்லாததையும் செய்வோம் என்று கூறினார்கள்!! அதன் அர்த்தம் இது தானோ?

தேர்தலின் போது மாதந்தோறும் மின் கட்டணம் அளவிடும் முறையை அமல்படுத்துவோம் என்று கூறினார்கள். ஆனால் அதற்கு மாறாக மின்சார கட்டணத்தை இரண்டு மடங்கு அளவுக்கு உயர்த்தி மக்கள் மீது கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளார்கள். சொத்து வரி அதிகரிக்கப்படமாட்டாது என அறிவித்தார்கள். ஆனால் சொத்து வரியை பன்மடங்கு உயர்த்தி மக்கள் மீது கூடுதல் வரி சுமையை ஏற்படுத்தியுள்ளார்கள். அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு ஆவின் பால் கொள்முதல் விலையை ரூ. 3 உயர்த்தியுள்ள தமிழக அரசு, நிறை கொழுப்பு சத்து கொண்ட ஆரஞ்சு நிற ஆவின் பால் விலையை லிட்டருக்கு ரூ. 12 அதிகரித்துள்ளது.

ஒரு லிட்டர் பால் விலை 12 ரூபாய் அளவுக்கு அதாவது 25% அளவுக்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. டீ, காபி சாப்பிடலாம் என்று அடிப்படையில் ஏழை, எளிய மக்கள் சாதாரண டீ கடை வைத்திருப்போருக்கும் ஆரஞ்சு பால் பாக்கெட் வாங்குகின்றனர். இந்த பாலின் விலையை லிட்டருக்கு 12 ரூபாய் உயர்த்தி இருப்பதன் மூலம் டீ மற்றும் காப்பி விலை மீண்டும் உயரக்கூடிய அபாய நிலையில் ஏழை எளிய மக்கள் பாதிப்படையக்கூடிய சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. பால் என்பது மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவை. இதன் விலையை உயர்த்தி கொண்டே இருந்தால், ஏழை மற்றும் நடுத்தர குடும்பத்தினர் பெரிதும் பாதிக்கப்படுவர்.

மேலும், பசுந்தீவனம், புண்ணாக்கு உள்ளிட்ட இடுபொருட்களின் விலை உயர்வு, கால்நடைகளுக்கான மருத்துவ செலவினங்கள் அதிகரிப்பு என பால் உற்பத்தியாளர்கள் கடும் அவதிக்கு உள்ளாக வேண்டிய சூழல் உருவாகும். அதே சமயத்தில் கொள்முதல் விலையை லிட்டருக்கு 15 ரூபாய் உயர்த்தி தர வேண்டும் என்று விவசாயிகளும், பால் விற்பனையாளர்களும் கோரிக்கை விடுத்த நிலையில் லிட்டருக்கு 3 ரூபாய் மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர அட்டைக்கும், தற்போது உயர்த்தப்பட்டுள்ள விலை உயர்வுக்கும் லிட்டருக்கு 14 ரூபாய் வித்தியாசம் உள்ளது. பொதுமக்களும், பால் உற்பத்தியாளர்களும் ஏமாற்றப்பட்டு இருக்கிறார்கள். அரசு அறிவித்துள்ள பால் கொள்முதல் விலை உயர்வு என்பது தற்போதைய காலகட்டத்தில் உகந்ததாக இருக்காது என்பதால் அதனையும் மறுபரிசீலனை செய்து குறைந்தபட்சம் லிட்டருக்கு 10 ரூபாயாக உயர்த்தி வழங்க அரசு முன் வர வேண்டும்.

சொந்த நலனுக்காக போராடும் கூட்டணி கட்சிகள் பொது மக்கள் நலனுக்காக ஆளும் அரசை எதிர்க்காதது ஏன்? திராவிட மாடல் அரசு நிர்வாகத்தில் தனது தோல்விகளை மறைப்பதற்காக ஆளுநரை விமர்சனத்திற்கு உள்ளாக்குகிறது. விடியாத அரசும், அதன் கூட்டணி கட்சிகளும் மக்கள் நலனுக்காக போராடுவதை விட்டு விட்டு ஆளுநரை மாற்றுவதற்கு கையெழுத்திட அறிவாலயம் செல்லும் கூட்டணி கட்சிகள்? பால் விலை உயர்வை பற்றி அக்கறை கொள்ளாதது ஏனோ? மக்களுக்கு இன்னும் எத்தனை கொடுமைகளை திமுக அரசு செய்ய உள்ளதோ?

தற்போது தீவனம், பராமரிப்பு என அனைத்தும், 100 சதவீதம் உயர்ந்து உள்ள நிலையில் மற்ற ஆவின் பால் வகைகளின் விலையையும் அடுத்தடுத்து உயர்த்த “திராவிட மாடல்” என்று கூறிக்கொள்ளும் “மக்கள் விரோத மாடல்” அரசு திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது. உயர்த்தப்பட்ட ஆரஞ்சு பால் விலையை குறைப்பதுடன், மற்ற பால் விலையையும் உயர்த்தக் கூடாது என தமாகா இளைஞரணி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்” என இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.