காமெடியை விட்டு வெளியே வரமாட்டேன்: நடிகர் யோகிபாபு பேட்டி

திருச்செந்தூர்: அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர் யோகிபாபு மற்றும் படக் குழுவினர் சுவாமி தரிசனம் செய்தனர். நகைச்சுவை நடிகராக திரையுலகில் அறிமுகமான நடிகர் யோகிபாபு, தற்போது படங்களில் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார். இயக்குநர் சிம்பு தேவன் இயக்கத்தில் உவரியில் நடைபெறும் ‘போட்’ எனும் திரைப்படத்தில் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு உவரியில் நடந்து வருகிறது. இதில் சின்னிஜெயந்தும் நடித்து வருகிறார். நேற்றிரவு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலில் நடிகர்கள் யோகிபாபு, சின்னிஜெயந்த் மற்றும் படக்குழுவினர் வழிபாடு செய்தனர்.

பின்னர் யோகிபாபு அளித்த பேட்டி: நல்ல மனிதன் என்ற பெயரை மக்களிடம் பெற்றுள்ளேன். நடிகர் விவேக் மிக கருத்துள்ள மனிதர். அவர் அப்துல்கலாம் போன்ற மனிதர்களுடன் அதிகம் பயணித்தவர். அதனால் அவருக்கு நிறைய விஷயங்கள் தெரியும். எனக்கு கருத்துக்கள் சொல்ல தெரியாது. இயக்குனர்கள் என்ன சொல்லி தருகிறார்களோ, அதை நான் காமெடியாக வெளிப்படுத்துகிறேன். மேலும் குழுக்களாக டிராக் மூலம் காமெடி செய்வது மட்டும் காமெடி அல்ல. சோலாவாக செய்வதும் காமெடி தான்.

திரைக்கதை மற்றும் வசனம் எழுதி ஹீரோவாக நான் நடிக்க இருப்பது உண்மை தான். அதற்கான சரியான தயாரிப்பாளர் இன்னும் கிடைக்கவில்லை. எனக்கு ஹீரோவாக நடிப்பதற்கான முக பாவனை என்பது நிச்சயம் இல்லை என்பதை ஒத்துக் கொள்கிறேன். ‘மண்டேலா’ திரைப்படம் என் முக பாவனைக்கேற்றாற்போல் இருந்ததால் தான் வாய்ப்பு கிடைத்தது.

அது போன்று தான் தற்போது வரக்கூடிய அனைத்து படங்களும் உள்ளது. தற்போது சிம்புதேவன் இயக்கத்தில் நடித்து வரும் ‘போட்’ திரைப்படமும் அப்படித் தான். இந்த மாதிரி கதாநாயக படங்களில் இருந்து கூட நான் வெளியே வந்து விடுவேன். ஆனால் தனக்கு கை கொடுத்த தொழில் காமெடியன் தான். இதை விட்டு தன்னால் வெளியே வர முடியாது. நான் திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்தாலும், காமெடியனாக நடித்தாலும், பொதுமக்களும், ரசிகர்களும் ஒரே கோணத்தில் தான் பார்க்கின்றனர்.
இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.