திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த வெலக்கல்நத்தம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இளவரசன் என்பவர் தமிழ் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இவர் காலையில் மது போதையில் வந்து பாடம் எடுக்காமல் தூங்குவதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதேபோல் மது போதையில் சரியாக பாடம் எடுக்காமல் மாணவ மாணவிகளை ஆபாசமான வார்த்தைகளால் திட்டுவதாகவும் கூறப்படுகிறது. இந்த சம்பவம் பற்றி மாணவர்கள் பெற்றோரிடம் கூறவே இந்த விவகாரம் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு எட்டியது.
இதனைத் தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர் இளவரசனை எச்சரித்துள்ளனர். அதன் பின்னரும் இளவரசன் திருந்தாமல் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு வகுப்பறைக்குள் மது போதையில் தடுமாறியபடி பிரச்சனை செய்துள்ளார். மாணவர்கள் தரப்பிலிருந்து மீண்டும் மாவட்ட பள்ளி கல்வித்துறை அதிகாரிகளுக்கு புகார் சென்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து திருப்பத்தூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் பரிந்துரையின் பெயரில் பள்ளியில் விசாரணை நடத்த மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை சம்பந்தப்பட்ட பள்ளிக்கு நேரடியாக சென்றுள்ளார். பள்ளியில் நடத்தப்பட்ட விசாரணையில் தமிழ் ஆசிரியர் இளவரசன் மது போதையில் இருந்தது உறுதி செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து இளவரசன் மீது குற்ற நடவடிக்கைகள் எடுக்க பள்ளியின் தலைமை ஆசிரியை அமுதா நாட்றம்பள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். திருப்பத்தூர் மாவட்ட கல்வி அலுவலர் ராஜா அண்ணாமலை கொடுத்த அறிக்கையின் அடிப்படையில் தமிழ் ஆசிரியர் இளவரசனை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மதன்குமார் தற்காலிக பணியிடை நீக்கம் செய்துள்ளார்.