இன்று சென்னையில், விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, “பாஜக என்பது வெளிப்படையாக இயங்கக்கூடிய ஒரு அரசியல் இயக்கம். அதுமட்டுமல்லாமல், தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற ஒரு அரசியல் கட்சியாகவும், மக்களுக்குப் பதில் சொல்லக்கூடிய இடத்திலும் பாஜக இருக்கிறது.
இதையடுத்து, பாஜகவிற்கு சில பொறுப்புகளும், சட்டப்பூர்வமாகப் பதில் சொல்லக்கூடிய இடத்திலும் இருக்கிறது. ஆனால் ஆர்எஸ்எஸ் ஒரு பதிவு செய்யப்பட்ட இயக்கமாகவோ, உறுப்பினர்களை அதிகாரப்பூர்வமாகக் கொண்டிருக்கக்கூடிய ஒரு இயக்கமாகவோ, பொறுப்பாளர்களை நியமிக்கக் கூடிய இயக்கமாகவோ இல்லை.
இந்த அமைப்பின் மாநில பொறுப்பாளர்கள் யார், மாவட்டப் பொறுப்பாளர்கள் யார், ஒன்றிய பொறுப்பாளர்கள் யார், என்ற உயர்நீதிமன்றத்தின் கேள்விக்கு கூட அவர்களால் பட்டியலைத் தர முடியவில்லை. கிட்டத்தட்ட ஒரு தலைமறைவு பயங்கரவாத இயக்கத்தைப் போலச் செயல்படுகின்ற ஒரு இயக்கமாகவும், இருட்டில் செயல்படுகின்ற ஒரு இயக்கமாகவும் தான் ஆர்எஸ்எஸ் உள்ளது.
இதனால்தான், ஆர்எஸ்எஸ் இயக்கம் கலாச்சாரத்தின் பெயரில் பேரணி நடத்துகிறோம், இயக்கம் நடத்துகிறோம் என்று வன்முறையைத் தூண்டுவதற்கும், வெறுப்பு அரசியலை விதைப்பதற்கும், மதத்தின் பெயரால், சாதியின் பெயரால், சமூகத்தைப் பிளவு செய்வதற்கும் முயற்சி செய்கிறது.
இதைத்தொடர்ந்து, ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு 18 குண்டு வெடிப்புச் சம்பவங்களில் தொடர்பு இருக்கிறது என்று ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவர் தெரிவித்திருக்கிறார். தற்போது, அவர்களுக்கு இருந்த தொடர்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இதையெல்லாம் சான்றாக வைத்துத்தான் ஆர்எஸ்எஸ் பொது இயக்கமாக நடமாடக்கூடாது என்பது எங்கள் வலியுறுத்தலாக இருக்கிறது” என்றுத் அவர் தெரிவித்துள்ளார்.