நாகர்கோவில் அருகே திருமணமான மூன்றே மாதத்தில் கணவனை விஷம் கொடுத்து கொலை செய்ய மனைவி முயற்சித்ததாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் கணவன் குற்றம் சாட்டினார்.
கன்னியாகுமரி மாவட்டம் இரணியல் அருகே உள்ள ஆழ்வார் கோயில் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் முருகன். கட்டுமான தொழிலாளியான இவருக்கும் இறச்சகுளம் பகுதியைச் சேர்ந்த சுஜா என்பவருக்கும் கடந்த ஆகஸ்ட் மாதம் 31 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.
இந்நிலையில், திருமணத்திற்குப் பின்பு இரண்டு மாதங்கள் வரை புதுமண தம்பதியர் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர். இதையடுத்து கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு வடிவேல் முருகன், திடீரென ஒருநாள் இரவில் வீட்டில் நினைவிழந்து விழுந்துள்ளார். இதையடுத்து உடனடியாக அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளார்.
இதற்கிடையே, கடந்த ஒருமாத காலமாக சுஜாவின் நடவடிக்கையில் வடிவேல் முருகனுக்கு சந்தேகம் எழுந்தது. இதையடுத்து வடிவேல் முருகன், தனது மனைவியை கண்காணிக்க தொங்கியுள்ளார். ஏற்கெனவே திருமணமான சில நாட்களுக்கு பின்னர் இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு இளைஞரை காதலித்து வந்ததாகவும் அவரோடு தற்போது எவ்வித தொடர்பும் இல்லை எனவும் சுஜா கணவரிடம் கூறியிருந்தார்.
இதைத் தொடர்ந்து சமீப காலமாக சுஜாவின் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றங்களால் முன்னாள் காதலனுடன், மனைவிக்கு தற்போதும் தொடர்பு இருக்கிறதா என கணவனுக்கு சந்தேகம் எழுந்தது. ஏற்கனவே மனைவி தனது செல்போனை லாக் செய்து வைத்திருப்பதால் அதை திறந்து பார்க்க முடியாமல் வடிவேல் முருகன் குழம்பிய நிலையில், அதை அன்லாக் செய்வது எப்படி என்பதையும் மனைவியின் செல்போன் பயன்பாட்டின் போது மறைமுகமாக கவனித்து தெரிந்து கொண்டுள்ளார்.
இதையடுத்து செல்போனை திறந்து பார்த்தபோது தனது மனைவிக்கும் முன்னாள் காதலனுக்கும் இடையே நிகழ்ந்த வாட்ஸ் அப் சாட் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவனுக்கு அளித்த மருந்தில் ஏதோ கலந்து கொடுத்ததாக முன்னாள் காதலன் மற்றும் சுஜா ஆகியோர் பேசிக்கொண்ட தகவல் வாட்ஸ்-அப்பில் பதிவாகி உள்ளது. கணவனை தனக்கு பிடிக்கவில்லை எனவும் பிடிக்காத கணவனோடு வாழ்க்கை நடத்துவது கஷ்டமாக உள்ளது எனவும் இன்னும் பல்வேறு அதிர்ச்சி தரும் தகவல்களை காதலனோடு சுஜா பகிர்ந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், உடல்நிலை தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவதால் ஸ்லோ பாய்சன் அளித்திருப்பார் என உறுதி செய்த வடிவேல் முருகன், காவல்துறைக்கு புகார் அளித்த பின்பு ஆசாரி பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சென்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். ஐந்து நாட்களுக்கு மேலாக சிகிச்சை பெற்று வரும் வடிவேல் முருகனுக்கு இன்னும் உடல்நிலை சரியாகவில்லை எனவே போலீசார் இச்சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்து தனது மனைவியையும் அவரது காதலனையும் கைது செய்து தனக்கு அளித்த மருந்தை அறிந்து அதற்குரிய சிகிச்சை அளிக்க காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகத்திடம் கேட்டபோது… வடிவேல் முருகனின் ரத்த மாதிரியை எடுத்து ஆய்வு மையத்திற்கு அனுப்பியுள்ளோம். அதன் முடிவு வந்த பின்பு என்ன வகையான மருந்து அல்லது விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என தெரியவரும் என தெரிவித்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுததியுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM
